தகவல் vs தொழில்நுட்பம் - I என் மறுமொழி

காசி,

>>>
1. ஒரு நண்பரைப் பார்க்க வேண்டும் என்று கோவையில் இருந்து சென்னைக்கு வந்திருக்கிறீர்கள். அவருடைய
அலுவலகப் பெயர் தெரியும். தொலைபேசி எண் , முகவரியைத் தொலைந்துவிட்டது. அவருடைய அலுவலக எண்
டெலிபோன் டைரக்டரியில் இல்லை. ஒரு பிரவுசிங் மையத்துக்கு சென்று, அவருடைய நிறுவனத்தின் பெயரை
கூகிளில் தேடினால் ச்சீப்போ என்று துப்புகிறது. இன்னும் ஒரு மணி நேரத்தில் அவரை அவருடைய அலுவலகத்தில் பார்த்தே ஆகவேண்டும். இதற்கு என்ன செய்ய வேண்டும் ?
>>>

நிறுவனம் என்கிற entity நிச்சயமாய் ஏதாவது ஒரு முறையில், ஏதாவது ஒரு அரசுத்துறையுடன் தொடர்பு
கொண்டிருக்கும். பதிவு செய்தல், விற்பனை வரி, சுற்றுச்சூழல் விஷயம், வருமானவரி, சட்டத்துறை, அந்த நிறுவனம் செய்யும் வியாபாரத்துடன் சம்மந்தப்பட்ட அசோசியேஷன்கள், என்று ஏதாவது ஒரு
துறையுடன் நிச்சயம் தொடர்பு இருக்கும். இந்தியாவில் இருக்கும் ஒரு கணிப்பொறி நிறுவனத்தைப் பற்றி, MAIT ( Manufaturers of Information Techonlogy) NASSCOM இலோ, அல்லது வேறு எந்த அசோசியேஷனிலோ தகவல் கிடைக்கும் என்று சொல்லிவிட முடியாது. இந்த மாதிரி தகவல்கள், இறைந்து கிடக்கின்றன. அதற்காகத்தான் சுற்றி வளைத்து அந்த உதாரணம். ( அது சரி, பிஎஸ்என்எல் தளத்தில்
சும்மனாச்சுக்கு என்று இல்லாமல் நிஜமாகவே ஏதாவது தேடியிருக்கிறீர்களோ? :-)

>>>>>>
"tell me one or two sites, where i can get all the information about the
latest developments in tamil computing" இப்படிக்கேட்பவர் ஒரு பத்திரிகையாளரா அல்லது
மொழிபெயர்ப்பாளரா என்பதை நான் மற்றவர்கள் தீர்ப்புக்கு விடுகிறேன். நீங்கள் அவ்வளவு விவரம்
கொடுத்ததே அதிகம். அதையெல்லாம் ஒரே சைட்டில் ஒரே பக்கத்தில் காண்பித்தால், இவர் அதைப் பற்றி ஒரு
'மேட்டர்' செய்து பதிப்பிப்பாராமா? அட ராமா? நம் பத்திரிகையாளர் நிலை இவ்வளவு கேவலமாய்
இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ராய்ட்டர், பிபிசி, பிடிஐ, சிஎன்என் போன்ற நிறுவனங்கள்
கொடுப்பதை அப்படியே மொழிபெயர்த்து, எது நம் மக்களுக்கு முக்கியத்துவம் மிக்கது என்பதை அறிந்து
வரிசைப்படுத்தத் தெரியாத நம் தொலைக்காட்சி செய்திகள் மாதிரியே இருக்கிறது, உங்கள் பத்திரிகை
நண்பரின் நிலை. கடவுள் அவரையும், அந்தப் பத்திரிகையையும், அதைப் அதைப்படிக்கும் வாசகரையும்
காப்பாற்றட்டும்.

நிற்க, நீங்கள் கேட்ட அத்தனை தகவல்களுமே *ஒரே* இடத்தில் கிடைக்கத்தான் செய்கின்றன. 'மொசில்லா'
தமிழா உலாவியைத்திறந்தால், அத புத்தக்கக் குறிப் பட்டியலில், கிட்டத்தட்ட நீங்கள் குறிப்பிட்ட
அத்தனைக்கும் சுட்டி கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் காண்பியுங்கள், அவர் அதை வைத்து ஒப்பேற்றட்டும்.
>>>>>>

காசி, நம்முடைய கேள்வி, தமிழ்பத்திரிக்கையாளர்களின் தரம் குறித்தா அல்லது, நம்ம வேலை ஆகவேண்டும்
என்பது குறித்தா என்பதைப் பற்றி முதலில் ஒரு தெளிவுக்கு வரவேண்டும். நான் பத்திரிக்கையாளன் இல்லை.
என்றாலும் இது போன்ற பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டு, மாட்னி ஷோ பார்த்து விட்டு, வந்து டிக்கட்டை
கசக்கி எறிந்து , " என்னாத்த படம் எடுக்கிறான்? " என்று ஒற்றை வார்த்தையில் ஒட்டுமொத்தமாகப்
புறக்கணிப்பதற்கு சமம். பத்திரிக்கையாளை விடுங்கள். ஒரு பாமரனுக்கு. ( பாமரனுக்கு எதுக்கு தமிழும்
கம்ப்யூட்டரும் என்று கேட்பீர்களோ? :-) ) தமிழ் தொழில்நுட்பத்தை பற்றி எத்தனை பத்திரிக்கைகள்
இதுவரை எழுதி இருக்கின்றது? கணிணிக்கென்று ஏதாவது தமிழ் பத்திரிக்கை உண்டா? ஒன்று இரண்டைத் தவிர.வெங்கட்டும், முகுந்தும், சுஜாதா செய்யும் அநியாயத்தைப் பற்றி மாய்ந்து மாய்ந்து எழுதுகிறார்கள். யாருக்கு,இது பற்றி நன்றாகத் தெரிந்த உங்களுக்கும் எனக்கும் மட்டும் தான். பொது மக்கள் தான் பயனீட்டாளர்கள் என்று முடிவு செய்த பின், அதனை பொது ஊடகங்களில் கொண்டு செல்ல அனைத்து முயற்சியும் செய்துதான் ஆகவேண்டும்.இது ஒரு tact. நம்மை நாமே குறைத்துக் கொள்கிறோம் என்றோ, நாம் பத்திரிக்கைகளின் தயவு வேண்டி நிற்கிறோம் என்றோ ஆகாது. நான் இது போலத்த்தான் இருப்பேன், வேண்டுமென்பவர்கள் வந்து தேடிக்கொள்ளட்டும் என்பது ஒரு விதமான tyranny என்றுதான் சொல்லுவேன். ஒரு வெர்னாகுலர் பத்திரிக்கையை, சிஎன்என் , பிபிசி உடன் ஒப்பிடுகிறீர்களா ? அது சரி :-).

அன்புடன்
பிரகாஷ்

Comments

Popular posts from this blog

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

9 weird things about prakash

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்