சு.ரா உரை பாகம் II

ஒரு அமெரிக்க - விமர்சகர் என்று கூடச் சொல்ல முடியாது - ஒரு பத்தி எழுத்தாளர். வாராவாரம், பத்திரிக்கைகளுக்குப் புதிய புத்தகங்களைச் சிபாரிசு செய்யக் கூடியவர். ************** என்று பெயர். அவருடைய வாக்கியம் ஒன்று நினைவுக்கு வருகிறது. " literature brings into your conciousness, what you don't know, u knew". இந்த வாக்கியத்தை, அனேகமாக அவருடைய ( அசோகமித்திரன் ) கதைகள் ஒவ்வொன்றையும் படிக்கும் போதும், எனக்கு நினைவுக்கு வருகின்றன. அதில் மிகப் பெரிய ஒரு சந்தோஷத்தை நான் அடைகிறேன். அந்த சந்தோஷத்தை வாசகர்கள் அடையவேண்டிய அவசியம் இருக்கிறது என்று நான் மனப்பூர்வமாக, அவரைப் போலவோ, அவருடைய காலத்திலோ, அல்லது அதற்கு முன்னாலோ, எழுத ஆரம்பித்த எழுத்தாளன் நான் - அவரை உங்களுக்கு மனப்பூர்வமாக நான் சிபாரிசு செய்கிறேன். அவரைப் படிக்கவில்லை என்றால் பெரிய நஷ்டம் என்று கூட நான் சொல்லுவேன். கட்டாயமில்லை என்று சொன்னேன். ஆனால் மிகப் பெரிய இழப்பு என்று நான் சொல்லுவேன். அவசியம் அவரைப் படித்துப் பார்க்க வேண்டும். அதற்கான எந்த விதமான முன்தயாரிப்புகளும் அவருக்குத் தேவையே இல்லை. அவ்வளவு எளிமையில் - அதாவது அவரது எளிமை என்பது வெளிப்படையான எளிமையாக இருந்தாலும் கூட, ரொம்ப சாதுர்யம் நிறைந்த எளிமை அது. ஆனால், உங்களுக்கு, அதைப் படிப்பதற்கான சங்கடங்களை அவர் உருவாக்குவதில்லை. ஆகவே நீங்கள் அவரை அவசியம் படிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

மொத்தமாக அவரது கதைகளில் - இந்தக் கூட்டத்துக்கு வருவதற்கு முன்னால் - எண்பது கதைகளைத்தான் படித்திருந்தேன். கிட்டதட்ட இருநூறு கதைகள் இருக்கின்றன. பல கதைகளை பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் படித்திருக்கிறேன் என்றாலும் கூட, இந்தக் கூட்டத்தில் பேசுவதற்காக எண்பது கதைகளைப் படித்திருந்தேன். படித்த போது எனக்கு ஒன்று தெரிந்தது. எந்தக் கதையிலும் வன்முறை என்பது கிடையாது. ஏதாவது ஒரு சந்தர்ப்பம் சார்ந்தாவது வந்திருக்கலாம். ஒரு கோடரி வந்திருக்கலாம். ஒரு அரிவாள் வந்திருக்கலாம், ஒரு வெட்டுக் கத்தி வந்திருக்கலாம். ஒரு துப்பாக்கி வந்திருக்கலாம். எங்கோ ஒரு கதையில் அரிவாள்மணை வருகிறது. வெண்டைக்காயோ கத்தரிக்காயோ நறுக்குவதற்காக. வேறு ஒரு ஆயுதத்தையும் நான் அவரது கதைகளில் நான் பார்க்கவே இல்லை. மற்றொரு கதையில் கத்தரி வருகிறது. துணியை வெட்ட. சுத்தியல் , ஆணி போன்ற எளிய உபகரணங்கள் வருகின்றன.

தெளிவாக , வாழ்க்கையின் ஒரு ஊடாக, அசோகமித்திரன் அவர்களைப் பார்க்கிறேன். அதை எதிர் கொள்ள மனிதன் கற்றுக் கொள்ள வேண்டும். அதோடு ஒரு சண்டையை, வலுச்சண்டையை உருவாக்குவதால், வாழ்க்கை பயனற்றதாகப் போய்விடும். அதையும் வாழ்க்கையின் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் நினைக்கிறாரோ என்று நான் நினைக்கிறேன்.

அவர் எழுத்தில் இருக்கிற முக்கியமான ஒரு விஷயம் - இரண்டு விஷயங்களை இணைத்துச் சொல்ல வேண்டிய ஒரு விஷயம் - ஒன்று, அவருடைய கதைகள், கதாபாத்திரங்கள் சார்ந்தது, கதாபாத்திரங்களின் தீர்மானங்கள் சார்ந்தது. கதாபாத்திரங்களுடைய நிலைபாடுகளைச் சார்ந்து, செயல்பாடுகள் சார்ந்து இருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள். மிக அதிகமான சாத்தியக் கூறுகள் அவருடைய ஞாபகத்தில் இருந்து கொண்டிருக்கின்றன. இன்னொன்று... சாதாரணமாக ஒரு மனிதனுக்கு இருக்கக் கூடிய ஒரு புத்தி...'தனக்கு வெற்றிகள் எதுவுமே கூடவில்லை, அடுத்தவனுக்கு வெற்றிகள் கூடியிருக்கிறது....'அவன் போய் பஸ்நிலையத்தில் நின்றால், பஸ் உடனே கிடைக்கும், நான் போய் நின்றால் உடனே கிடைக்காது..' இது ஒரு விதமான சாத்தியக் கூறு. ' நான் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போனால், டிக்கெட் கிடைக்காது, அவனுக்குக் கிடைக்கும். நான் எவ்வளவு நன்றாக வேலை செய்தாலும், சம்பாதிக்க முடியவில்லை, அவனால் சுலபமாகச் சம்பாதிக்க முடிகின்றது. ' நான் அழகான ஆடைகள் அணிந்து கொண்டாலும், நான் அழகாக இல்லை, அவன் அழகில்லாத ஆடைகள் அணிந்து கொண்டாலும், அவன் அழகாக் இருக்கிறான்' ... இது போன்ற ஒப்பீடல்கள், மனித மனத்துக்குள் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கின்றன. இந்த அம்சம் ஒன்று... மற்றொன்று... மனித வாழ்க்கையில் இருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள். இந்த சாத்தியக் கூறுகள் சார்ந்த அசோகமித்திரனுடைய பிரக்ஞை.

இந்த இரண்டு விஷயங்களையும் நீங்கள் புரிந்து கொள்ளுவதற்காக, என்னுடைய சொந்த கற்பனையாக ஒரு சில வாக்கியங்களை நான் உருவாக்கித் தரலாம் என்று நினைக்கிறேன். அந்த வாக்கியங்களை நான் உருவாக்காத வரையில், இவைகளைச் உங்களிடம் சொல்லிப் புரிய வைப்பது கடினமான ஒரு காரியமாக இருக்கும்.

இப்போது அசோகமித்திரனுடைய கதையில் வரக்கூடிய 'நான்' ... - அந்த ' நான்' அசோகமித்திரன் அல்ல, தயவு செய்து அசோகமித்திரனை நினைத்துக் கொள்ளாதீர்கள் - அசோகமித்திரனுடைய கதையில் வரக்கூடிய ஒரு 'நான்', இப்போது நான் பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறான். இதைக் கேட்டுக் கொண்டிருக்கிறான். இப்போது அவன் சிந்திக்கத் தொடங்குகிறான். இவை என்னுடைய கற்பனையான வார்த்தைகள். " சுந்தர.ராமசாமி சந்தோஷமாகத்தான் பேசுகிறார், அதிலொன்றும் சந்தேகமே இல்லை... அவருக்கு சந்தோஷத்துக்கு என்ன குறைச்சல்? சந்தோஷமாகத்தான் அவர் இருக்கிறார். என்னை மாதிரி அவரா? ஓயாமல் புலம்பிக் கொண்டிருக்கிற நானும் அவரும் ஒன்றா? அவர் வேறு, நான் வேறு.. அதனால் தான் அவர் சந்தோஷமாக் இருக்கிறார். முன்னால் இருந்து பார்க்கிற போது, அவர் சந்தோஷமாக இருக்கிறார் என்று தோன்றினாலும் கூட, பக்கவாட்டில் இருந்து பார்க்கிற போது, சந்தோஷக் குறைவாக இருக்கிறாரோ என்று தோன்றுகிறது. என்னைப் போல் அவரும் மாறிவிட்டார் போலிருக்கிறது. பாவம்... அவருக்கு ஏதோ ஒரு இடைஞ்சல் ஏற்பட்டிருக்க வேண்டும். அந்த இடைஞ்சல் ஏற்படவில்லை என்றால், அவர் சந்தோஷக் குறைவாக இருக்கக் கூடியவரே அல்ல. எனக்குச் சந்தோஷக் குறைவாக இருப்பதற்கு காரணங்களே வேண்டியதில்லை. ஆனால் அவருக்கு நிச்சயம் ஒரு காரணம் இருக்கிறது, எந்தக் காரணம் என்று தெரியவில்லை. அனேகமாக அவரது செருப்பு மேல் வாருக்கு அடியில் ஒரு கட்டெறும்பு மாட்டிக் கொண்டு விட்டதோ என்னமோ? கட்டெறும்பில் பல வகைகள் இருக்கின்றன. பிள்ளையார் எறும்பில் இருந்து கட்டெறும்பு வரை, எந்த வகையான எறும்போ தெரியவில்லை.. பாவம்..எறும்பு ஒரு தடவை கடித்தால், அவரது முகம் இந்த அளவுக்கு மோசமாக இருக்காது. தொடர்ந்து கடித்துக் கொண்டிருக்கிறது போல. அப்படிக் கடித்தால், அவர் உடனடியாக தன்னுடைய செருப்பை கழற்றி, அந்த எறும்பை தட்டி விட்டுக் கொள்வதற்கு கூச்சப்படுகிறவரே அல்ல, நான் தான் கூச்சப் படக்கூடியவன். ஆனால் எறும்புதானா என்று சந்தேகமாக இருக்கிறது. இது போன்ற எறும்புகள் "*****" க்கு வரும், ஆனால் சேம்பர் ஆ·ப் காமர்ஸ¤க்கு வருமா என்று எனக்குச் சந்தேகமாக இருக்கிறது. தவறாக அந்த எறும்புகள், இங்கே வந்துவிட்டதோ...? என்னைப் போல் அவரும் தவறாக அலையகூடியவர் அல்ல. நான் எந்த இடம் போகவேண்டும் என்று தெரியாமல் அலைவதைப் போல், அந்த எறும்புகளும் இங்கே அலையத் தொடங்கி விட்டன என்று நினைக்கிறேன். ஆனால் உண்மையாகப் பார்க்கின்ற போது, எறும்புகள் அல்ல காரணம் என்று தோன்றுகிறது. இன்று மாலையில் போட்டுக் கொள்ள வேண்டிய மாத்திரை ஒன்றைப் போட்டுக் கொள்ளாமல் வந்திருக்கிறார். அதுதான் உண்மையான விஷயம். ஒரு பேட்டியில், தனக்கு ஏழு வியாதிகள் இருப்பதாகவும், அந்த வியாதிகளுக்காக, பதினாலு விதமான மாத்திரைகள் சாப்பிடுவதாகவும் சொல்லி இருந்தார். இன்று மாலையில் பார்க்கிற போது, ஒரு மாத்திரை குறைந்து விட்டது போல இருக்கிறது. டப்பாவைத் திறந்து பார்க்கிறார், பதிமூன்று மாத்திரைகள் தான் இருக்கிறது. இந்த மாதிரி கவனக்குறைவுகள் அவருக்கு ஏற்படாதே? எனக்குத்தான் ஏற்படும் . எப்படி இந்த கவனக்குறைவு அவருக்கு ஏற்பட்டது? இந்தக் கூட்டம் நேற்று நடந்திருந்தால், எல்லா மாத்திரைகளையும் அவர் சாப்பிட்டு விட்டு வந்திருக்க முடியும்,. இந்த பத்ரி, அவரிடம் தொலைபேசியில் கேட்டிருக்கலாம். உங்களிடம் மாத்திரைகள் இருக்கின்றதா? உங்களால் இன்றே இந்தக் கூட்டத்துக்கு வர முடியுமா என்று ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம். கேட்கக்கூடியவர் தான் அவர். ஆனால் ஏதோ கேட்காமல் இருந்து விட்டார். நானாவது மாத்திரை போட்டுக் கொள்ளாமல் இருப்பேன். சுந்தர.ராமசாமி போட்டுக் கொள்ளாமல் இருக்கக் கூடியவரே அல்ல. அவர் எப்போதுமே, ஜேபியில் மாத்திரையை வைத்துக் கொண்டிருப்பார். அனேகமாக மாத்திரை கிடைக்காமல் போயிருக்கிறது. இங்கு வந்து விசாரித்திருக்கிறார். இங்கும் இல்லை. இது போல நான் விசாரித்தால் (கிடைக்காமல் போனால்) நான் உடனே,.மாத்திரை போடுவதை நிறுத்தி விடுவேன், அவர் நிறுத்த மாட்டார். உடனே, அமெரிக்காவில் இருக்கும் தன் மகளுக்குப் போன் செய்து சொல்லுவார். அந்தப் பொண்ணும், அங்கிருந்து மாத்திரைகளை அனுப்பி விடும். ஓவர்நைட்டில் வர வேண்டிய மாத்திரை வந்து சேரவில்லை என்று நினைக்கிறேன். கடைசி வரையிலும் காத்துக் கொண்டிருந்திருக்கிறார். ஆனால், அந்த மெயில் - ஓவர் நைட் மெயில் வந்து சேரவில்லை. நேற்று நடந்த மழை மிக மோசமாக இருந்தது, இடி இடித்துக் கொண்டிருந்தது, மின்னல் மின்னிக் கொண்டிருந்தது, அதனால் விமான ஓட்டி கொஞ்சம் தாமதமாக வந்திருப்பான், அவன் என்ன செய்வான் பாவம். எவ்வளவு பெரிய பொறுப்பை அவனிடம் ஒப்படைத்திருக்கிறோம், அவன் என்ன செய்வான்.

இப்படி அவரது கதைகளில், முடிவற்ற சாத்தியக் கூறுகளைச் சொல்லிக் கொண்டே போகிறார். இதனால், உங்களுக்கு என்ன பயன், எனக்கு என்ன பயன் என்று நீங்கள் கேட்கலாம். மிகப் பெரிய பயன் ஒன்று இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். வாழ்க்கையைச் சார்ந்து, மனித மனத்தைச் சார்ந்து, எளிய தீர்மானத்துக்கு வருவது என்பது விவேகமான செயல்பாடு அல்ல என்று நான் நினைக்கிறேன். மனம் ஒரு விசித்திரமான வலைப்பின்னல். மிகவும் விசித்திரமான ஒன்று. அவற்றுக்குள் ஓடக்கூடிய எண்ணங்களை நீங்கள் சுலபமாகக் கண்டுகொள்ள முடியாது. உங்களுக்குத் தெரிந்ததை வைத்து, ஒரு விஷயத்தை நீங்கள் தீர்மானிக்க முடியாது. இன்னும் பல்வேறுபட்ட பரிமாணங்கள் இருக்கலாம். இங்கு நான் சொன்ன உதாரணங்களை, நடைமுறையில், அவரது கதைகளைப் படித்துப் பார்க்கிற போது, அது எந்த அளவுக்குச் சரியாக இருக்கிறது, எந்த அளவுக்குச் சரியாக இல்லை என்று பார்ப்பதன் மூலம் தான் நீங்கள் அவருக்கு ஒரு மரியாதை செய்ய முடியும். இது போன்ற நுட்பங்கள், அவரது படைப்பில் இருக்கும்.

இவ்வளவு முக்கியமான ஆளுமை படைத்த படைப்பாளிக்கு, தமிழில், நாம் போதிய கெளரவம் கொடுத்திருக்கிறோமா என்ற கேள்வி ஒன்று எழுகின்றது. அவரைக் கேட்டா, எனக்குப் போதிய கெளரவம் கிடைத்திருக்கிறது என்று சொல்லலாம். ஆனால், ஒரு படைப்பாளி அடைந்திருக்கக் கூடிய வாழ்க்கை - சுய திருப்தியைச் சார்ந்து அல்ல- அந்த படைப்புத் திறனுக்கு அனுசரணையான மதிப்பை அவருக்கு அளித்திருக்கிறோமா என்பதுதான் வாசகன் கேட்டுக் கொள்ளக் கூடிய கேள்வியாக இருக்கும். அப்படிப் பார்க்கும் போது, அவருக்கு அளித்திருக்கக் கூடிய கெளரவம் போதுமானது அல்ல என்று நான் நினைக்கிறேன்.

இன்றைக்கு உலகெங்கும், படைப்புத் தொழிலாகக் கற்றுத் தரக்கூடிய ஒன்றாக இருக்கிறது. அந்த இயக்கம் இப்போது மேலும் வலிமை அடைந்து வருகின்றது. ஓவியம் கற்றுக்கொடுக்கப் படுகின்றது. நாட்டியம் கற்றுக் கொடுக்கப் படுகின்றது. இசை கற்றுக் கொடுக்கப் படுகின்றது. அப்படி என்றால் ஏன் படைப்புக் கலையைக் கற்றுத் தரக்கூடாது. ஏன் சிறுகதை எழுத, நாடகம் எழுத, நாவல் எழுதக் கற்றுத் தரக்கூடாது என்பது ஒரு இயற்கையான கேள்வி. ஐரோப்பாவில், எந்த அளவுக்கு இந்த படைப்புக் கலை சம்மந்தப்பட்ட கல்வி பரவியிருக்கிறது என்பதைப் பற்றி எனக்கு நிச்சயமாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால். அமெரிக்காவில், மிகப் பெரிய அளவில் இது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதற்காக அவர்கள் சேர்த்து வைத்திருக்கக் கூடிய tools, படைப்புக்கலையை மாணவர்களுக்குச் சொல்லித் கொடுப்பதற்காகஅவர்கள் சேர்த்து வைத்துக் கொண்டிருக்கும் tools, நம்மால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாத அளவுக்கு, அளவில் மிக அதிகமாக இருக்கின்றன. இப்போது நம்முடைய பல்கலைக்கழகங்கள் ஏதாவது ஒன்று, ஏதோ ஒரு விவேகமான எண்ணம் ஒன்று அவர்களுக்கு ஏற்பட்டு, தமிழ் மாணவர்களுக்கும் படைப்புக் கலையைச் சொல்லிக் கொடுப்போம் என்று நினைத்தால் - நினைப்பது நல்லதா என்று ஒரு கேள்வி இருக்கிறது, ஏற்கனவே இருக்கக் கூடிய சினிமா எழுத்தாளர்கள், அரசியல் சார்பான எழுத்தாளர்கள், அல்லது சமயம் சார்ந்த எழுத்தாளர்கள், அல்லது புகழ்பெற்ற பத்திரிக்கைகளில் இருக்கக் கூடிய எழுத்தாளர்கள், இவர்களுக்கு அதிகமான உரிமை கிடைக்குமா, அல்லது உண்மையான எழுத்தாளர்கள் கெளரவத்துக்கு ஆளாவார்களா என்ற சந்தேகம் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் கூட - அது போன்ற படைப்புக் கலை சார்ந்த பாடதிட்டம் உருவாக்கப் படுமேயானால், அதனுடைய இயக்குனராகச் செயல்பட அசோகமித்திரனைத் தாண்டி, தமிழில் வேறு எந்தப் பெயரும் இல்லை என்று நம்மால் சொல்ல முடியும்.

இந்தச் சொற்களுடன்., நீங்கள், அசோகமித்திரனை, தீவிரமான ஒரு எழுத்தாளராக எடுத்துக் கொண்டு படிக்க வேண்டும் என்று மீண்டும் உங்களைக் கேட்டுக் கொண்டு என் பேச்சை முடித்துக் கொள்கிறேன், நன்றி வணக்கம்.

Comments

உரையை வலையேற்றியதற்கு நன்றி பிரகாஷ். ஆனா திரும்ப திரும்ப படிச்சலும் லக்கலக்க-தான் புரியமாட்டேங்குது பிரகாசு...
(ட்யூப் லைட்டா பூட்டேனோ என்னமோ?)

சுரேஷ் (கீவி)
சுரேசு,

எனக்கும் புரியலையேப்பா!

இன்னொரு கிவி
சு.ராவுக்கு எழுத மட்டுமல்ல பேசவும் தெரியும்னு நிரூபித்த பேச்சு. பின்பக்க சீட்டிலிருந்து படபடவென சரமாரியாக கைதட்டல் வேறு. ஹாட்டாக பேசிவிட்டு உட்கார்ந்த சு.ராவுக்கு நானும் ஹாட்டாக காபி கொடுத்தது தனி கதை!

சு.ரா பேச்சு கலகலவென்னு இல்லை உல்ட்டாவா லகலகன்னு இருந்துச்சுன்னு சொல்ல வர்றாரோ பிரகாசர்?!

Popular posts from this blog

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

9 weird things about prakash

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்