சிம்ரனின் 'இடை' நவீனத்துவமும், சில கவிதைகளும்

முந்தைய பதிவுகளின் ( ஒன்று, இரண்டு & மூன்று ) தொடர்ச்சியாக....

இது வரை நடந்த சம்பவங்களின் தொகுப்பின் சுருக்கம் கீழே....

1. கடந்த சனிக்கிழமை அன்று, இந்தியத் தொலைத் தொடர்புத் துறையில் இருந்து, தற்போது இயங்கிவரும் நூற்று ஐம்பது இணையச் சேவை வழங்கிகளுக்கு ஒரு உத்தரவு பறந்தது. மும்பை குண்டு வெடிப்பு தொடர்பின் விளைவாக, இந்திய அரசு, 18 இணையத்தளங்களை தடை செய்யக் சொல்வதுதான் அந்த உத்தரவின் சாராம்சம். அந்த பட்டியலில், ப்லொக்ஸ்பாட்டில் இயங்கும் சில தளங்களும் இருந்தன. சில குறிப்பிட்ட வலைப்பதிவுகளை மட்டும் தடை செய்ய வழி இல்லை என்பதால் ( அல்லது அவர்களுக்குத் தெரியாது என்பதால்) ஒட்டு மொத்தமாக ப்ளாக்ஸ்பாட்டில் இயங்கும் அனைத்து வலைப்பதிவுகளையும் பார்க்க தடை விதித்து விட்டார்கள்.

2. இந்த உத்தரவைப் பிறப்பிக்கக் காரணமாக இருந்த Computer Emergency Response Team - India ( CERT-IN),இன் உயரதிகாரி, இது தொடர்பாக எந்த விளக்கமும் தர மறுத்து விட்டதோடல்லாமல், " நீ யாரு இதை எல்லாம் கேட்க? " என்கிற ரீதியில் பதிலளித்தார்கள்.

3. முதலில், சில இணையச் சேவை வழங்கிகள் மட்டும், வட இந்தியாவில் முதலில் இந்தத் தடையை அமுல் செய்ய, பிறகு, மற்றவர்களும் படிப்படியாக இந்தத் தடையை அமுல் செய்திருக்கிறார்கள். இட்லி வடை, ஏர்டெல், தடையை நீக்கி விட்டது என்று சொல்லி இருக்கிறார். தற்போது சென்னையிலே டாடா இண்டிகாம் மட்டும் தான், இந்தத் தடையை விதிக்கவில்லை.

4. இந்திய வலைப்பதிவாளர்களின் ஒருமுனைப்பட்ட எதிர்க்குரல், நேற்றைக்குத்தான், சில வணிக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. என்.டி.டீ.வி மற்றும், ஐபிஎன் தொலைக்காட்சிகள், இந்த விவகாரம் குறித்த செய்திக் குறிப்பினை நேற்று இரவு ஓளிபரப்பினார்கள் ( அது முழுமையானதாக இல்லை ). அதைத் தொடர்ந்து, இன்று, பல தேசிய நாளிதழ்களில், இந்த விவகாரம் பற்றி செய்தி வந்திருக்கிறது.

5. CNN, Washington Post, NewYork Times போன்ற மேற்கத்திய செய்தி ஊடகங்களும் கடுமையாக விமர்சனம் செய்திருக்கின்றன.

6. தொலைத் தொடர்புத் துறை, அமைச்சகம், போன்றவை, சரியாக விளக்கம் தராததால், Right to Information Act மூலமாக தகவல்களைப் பெறும் முயற்சியில், வலைப்பதிவாளர்கள் இறங்கி இருக்கின்றனர். ( ஒரு வலைப்பதிவாள நண்பர் உருவாக்கிய மாதிரிப் படிவம் இங்கு கிடைக்கும். தேவைப் படுபவர்கள் இறக்கிக் கொள்ளலாம். என் பங்குக்கு நானும் ஒன்றை அனுப்பி இருக்கிறேன்.)

7. இந்தத் தடையினால் பாதிக்கப்படாமல், வழக்கம் போல இயங்குபவர்களும், இந்தத் தடையை மீறி, தமிழ்மணம், தேன்கூடு, அன்னியலோகம் அளிக்கும் சொகுசுச் சேவையைப் பயன்படுத்தி, இம்சை அரசன் புலிகேசி படத்தின் நகைச்சுவைக் கூறுகளை அலசி ஆராயும் பதிவுகளுக்குப் பின்னூட்டமிட்ட நேரம் போக, மீத முள்ள நேரத்தில், இணையத்திலே கருத்துச் சுதந்திரம் பற்றியும், இந்திய அரசாங்கத்தின் அராஜகமான போக்கு குறித்தும், ஏதேனும், நேர்மறை / எதிர்மறை கருத்து கொண்டவர்கள், தத்தமது பதிவுகளிலே, இது பற்றி எழுதி, எழுந்துள்ள எதிர்ப்புக் குரலுக்கு வலு சேர்க்குமாய் கேட்டுக் கொள்கிறேன்.

பின் குறிப்பு :

தலைப்புக்கான காரணம் : புரிந்தவர்களுக்குச் சொல்ல அவசியமில்லை. புரியாதவர்களுக்குச் சொல்லிப் பிரயோசனமில்லை.

Comments

அண்ணாத்த சைடு பார்ல தமிழ்ப்பதிவுகள் அப்டீன்ற தலைப்புல சில பதிவுகள ஒட்டிகினுகீதே.. அதுல http://mugamoodi.blogspot.comபதிவு மிஸ்ஸாவுது... ஒண்ணு இத்தயும் லிஷ்டுல ஒட்டு.. இல்லாங்காட்டி அந்த டைட்டில "எனக்கு பிடிச்ச தமிழ் வலைப்பதிவுகள்"னு மாத்து...
Muthu said…
இன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் இதைப்பற்றி ஒரு தலையங்க கட்டுரையும் ஒரு செய்திக்கட்டுரையும் இருந்தது.
சில குறிப்பிட்ட இஸ்லாமிய இந்துத்வ (20) தளங்களை நீக்க முயன்று தொழில்நுட்ப கோளாறினால் அனைத்தையும் நீக்கி விட்டார்களாம்.

பிரகாஷ்,

உங்களுடன் சேர்ந்து இந்த அடக்குமுறையை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.
ரவி said…
நானும் க(ண்)டிக்கிறேன்...:)
Boston Bala said…
சீனா அளவு புத்திசாலித்தனமாக தணிக்கை செய்யவும் வக்கில்லை. கூகிள் முடிவுகளைத் தேர்ந்தெடுத்து தவற விடுதல்; நீள் கட்டுரையின் இடையிடையே வரும் அதிர வைக்கும் தகவல்களை மட்டும் மறைத்தல்; ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜன்ஸ் மட்டும் நம்பாமல், புத்தி கூர்மையுள்ள கண்காணிப்பாளர்களை விசுவாசமாக செயல்பட வைத்து, செலக்டிவ் ஆக சென்ஸார் செய்து, எது தவிர்க்கப் படுகிறது என்று வல்லுநர்களே அறியாத மாதிரி அடக்கி ஆளுதல்... இப்படி நடக்கவும் அருகதை கிடையாது.

ஜெர்மனி மாதிரி நுட்ப வஸ்தாதுகளை நேரடியாகத் தொடர்பு கொண்டு, 'இப்படி பொலிடிகலி க்ரெக்ட் ஆக நடக்காவிட்டால், உம்மாச்சி கண்ணைக் குத்திடும்' என்று அடிபணிய வைக்கவும் - புஜபலம் போதவில்லை.

எங்கிருந்து சங்கேதமாகப் பேசிக் கொள்கிறார்கள் என்று தெரிந்தவுடன் ரகசியமாக ஒட்டுப் பார்த்திருக்கலாம். 'Live cell' என்று நாமகரணமிட்டி, போலிப் பெயருடன் அங்கத்தினராகி, சகல சாமுத்ரிகா லட்சணங்களுடன் உள் நுழைந்து, அவர்களின் திட்டங்களைத் தவிடு பொடி ஆகி இருக்கலாம். (மன்னிக்கவும்... இன்னமும் 'குருதிப்புனல்' திரைப்பட பாதிப்பு விலகவில்லை).

என்ன தகவல் துறை அமைச்சரோ? என்ன ஆக்ஸ்ஃபோர்ட் படிப்போ? விஷய ஞானமுள்ளவர்களையும், அனுபவம் உடையவர்களையும், சிந்தித்து செயல்படக் கூடியவர்களையும் உரிய பதவியில் நியமிக்கத் தெரியாத அரசியல்வாதிகள்.

அவரவருக்கு ஏற்ற மாதிரி
* இட ஒதுக்கீடினால் ஏற்படாத தகுதியின்மை
* இந்திய அரசின் ஆதிக்க மனப்பான்மை
* அரசுத்துறையின் அலட்சிய போக்கு
* மாற்று வலைப்பதிவு சேவைகளின் சாத்தியக்கூறுகள்
* பாகிஸ்தானைப் பார்த்து இளித்ததாம் பாரதம்
* வாரிசு அரசியலின் வக்கற்ற அமைச்சர்
* தீவிரவாதிகளை ஒடுக்க முடியாமல் வலையகங்களை அடக்கும் இந்தியா

என்று கருத்துரை மட்டுமே இயற்றி, இயலாமையை ஆற்றிக் கொள்வேன்.
Unknown said…
Thalaippu suthamaa puriyalai. Nice round up of events during the last few days.
Mookku Sundar said…
தலைப்புக்காக ஓடோடி வந்து பாத்தா, ....ச்ச்..தலைப்பில்லாம ஒரு படம் போடக் கூடாதா..??

மேட்டர் அல்லாருக்கும் போய் சேந்திருக்குமே..?? ;-)
Unknown said…
நல்லா சொன்னீங்க பாலாஜி. நானே சீனா எப்படியெல்லாம் சென்சார் செய்யறாங்கனு படிக்கனும்னு நெனச்சேன்.

இந்த ISPங்க அதுக்கு மேல. கோடு போடச்சொன்னா ரோடே போட்டுட்டாங்க. அத்தனை ISPங்களும் எப்படி ஒரேமாதிரி சொதப்புனாங்கனு தான் புரியல.

எது எப்படியோ.. தடுக்கப்படவேண்டிய தளங்கள் ரொம்பவும் பிரபலமாகி எல்லாரும் பாத்தாச்சு.
sugan said…
The blog ban has been revoked..

We can sing 'Eppo Kappal yeri Poiaachu'
http://suganthis.blogspot.com/2006/07/blog-ban-revoked.html

Popular posts from this blog

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

9 weird things about prakash

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்