இந்த வாரம் படித்து ரசித்த ஐந்து விஷயங்கள்

1. Moving to Madras 85 Migration following 83 - குமாரபாரதி

வலைப்பதிவாளர்கள் பட்டியலுக்குச் சென்று, நான் இது வரை பார்க்காத வலைப்பதிவுகளுக்கு ஒரு முறை சென்று பார்க்கலாம் என்று நினைத்து மேய்ந்த போது, வாசன் (அய்யா என்றால் அடிப்பார் :-) அவர்களின் கொள்ளிடக்கரையில் தடுக்கி விழுந்தேன். அங்கே, குமாரபாரதி என்பவரின் படைப்புகள் இருக்கும் வலைப்பக்கத்துக்கு ஒரு இணைப்புக் கொடுத்திருந்தார். இலங்கையின் இனப்பிரச்சினையில் , சென்னைக்கு குடிபெயர்ந்த போது, அவருடைய பார்வையில்
படும் நகர் காட்சிகளின் அழகான பதிவு தான் இந்த கட்டுரை . வாசன், குமாரபாரதி
பற்றி கொடுத்திருந்த குறிப்புகள் அனைத்திற்குமான விளக்கமும், நான் படித்த அந்த முதல் கட்டுரையிலேயே
கிடைத்தது. இனிமையான இலங்கைத் தமிழும், மெலிதான நகைச்சுவையும் கட்டுரைக்கு கூடுதல் சுவை.
இந்த குமாரபாரதி இப்போது இணையத்தில் எழுதிக் கொண்டிருக்கிறாரா?

2. மரத்தடி மாத்ருபூதம் - எல்லே சுவாமிநாதன்


வயிறு வலிக்க சிரிக்க வைத்த கட்டுரை. இதைப் பற்றி ஒன்றுமே சொல்வதற்கில்லை. படித்து பார்த்து விட்டு சிரிக்கலாம். வயிறு வலித்தால் பரால்கான் போட்டுக் கொண்டு படுத்துக் கொள்ளலாம்.


3. ஊர் + மக்கள் + குணவியல்பு


வெகுவாக ரசித்துப் படித்த ஒரு நடைச்சித்திரம். ஆரம்ப காலங்களில், இலங்கையின் பிரத்தியேகமான பிரயோகங்களைக் கொண்டு வரும் வாசிப்பதில் சற்று சிரமமிருந்தது. வார்த்தைகள் புரியாவிட்டாலும் கூட இடம் பொருளை வைத்து , குத்து மதிப்பாக புரிந்து கொள்ள முடிந்தது. தொடர்ந்து வாசிக்க வாசிக்க, அந்த நிலையில் இருந்து சற்று முன்னேற்றம். அதற்கு ரமணியின் படைப்புகளும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன்.


4. ஆங்காணும் - ஹரிகிருஷ்ணன்


குழுக்களில் தொடர்ந்து சின்னதும் பெரிதுமாக பலதும் எழுதி வருகிறார். படித்துக் கொண்டிருக்கிறேன் என்றாலும், திடுமென்று இது போல ஏதாவது ஒன்று வந்து நம்மைத் தாக்கும். கல்லா மா, தம் மக்கள் வரிசையில் 'ஆங்காணும்'. கத்தி மேல் நடக்கிற விஷயத்தை எழுதும் பொழுது, மொழியை இத்தனை அநாயசமாக கையாளும் அந்த திறமைதான் என்னை வியக்க வைக்கிறது. யோசித்துப் பார்த்தால், இந்த லாகவத்திற்காகத்தான் நான் முயன்று கொண்டிருக்கிறேன் என்று புரிகிறது.


5. வலைப்பூ பேட்டி : கண்ணன்


தினப்படிக்கு நாலைந்து குழுவின் மடல்கள், வலைப்பதிவுகள் என்று பலதும் படித்துக் கொண்டிருக்கும் போது, எந்த நேரத்தில் ஒரு நல்ல விஷயம் வந்து நம்மைத் தாக்கும் என்பதை எளிதிலே சொல்ல முடியாது என்பதற்கு இந்த பேட்டி ஒரு உதாரணம். நேர்காணல்களில், கேள்வி ஆழமாகவும் அதே சமயம் சுருக்கமாகவும், பேட்டி காணப்படுகிறவர் ஆர்வம் கொள்ளுமளவுக்கும் இருந்தால் அந்த பேட்டி சிறப்பாக அமையும். இந்த சூத்திரத்தின் படி கொஞ்ச நாளைக்கு முன்பு ரசித்துப் படித்தது ஜெயஸ்ரீ கோவிந்தராஜனின் கேள்விகளையும், அதற்கான ஜெயமோகனின் பதில்களையும் ( மரத்தடி இணையக்குழுவில்). அந்த வரிசையில் நேர்மையான ஒரு நேர்காணல் இது.

Comments

Popular posts from this blog

புரியாத பத்து விஷயங்கள்

9 weird things about prakash

மிக்ஸர் - I