கலைஞர் கருணாநிதி

1996 இல் வந்த கல்கியின் வந்த சிறுகதைகளின் unofficial பதிப்பு [ அதாவது, கல்கி பக்கங்களை கிழித்து, தைத்து, உருவாக்கப் பட்ட நூல்வடிவம்). தமயந்தி, பெ.நாயகி, ஜி.சுரேந்திரநாத், பா.ராகவன், வெங்கடேஷ், ரிஷபன், கிருஷ்ணா, பத்மா ரவிசங்கர், யோகி, ஆகியோர் எழுதின கதைகள்.[ இதைப் பற்றி தனியாக பதிவு செய்ய வேண்டும் ] இப்போது வருகின்ற கதைகளுக்கு கிட்டேயே வரமுடியாது என்பதைப் போன்ற நல்ல கதைகள்.

திடுமென்று கலைஞரின் பேட்டி குறுக்கே வந்தது.

கலைஞரின் எழுபத்துஐந்தாவது பிறந்த நாளின் போது எடுத்த பேட்டி அது. இதிலே ஒரு விசேஷம் என்ன என்றால், அரசியல் தொடர்பான கேள்விகள் கிடையாது. பொதுவான விஷயங்கள், சினிமா அனுபவங்கள், நட்பு வட்டம் , குடும்பம் ஆகியவற்றைப் பற்றிய கேள்விகள். கேள்விகளை எழுதி, அனுப்பி வைத்து, பதிலையும் எழுதி வாங்கிக் கொள்கிற வழக்கமான பாணி அல்ல கலைஞருடையது என்று பத்திரிக்கை நண்பர்களிடம் இருந்து கேள்விப் பட்டிருக்கிறேன். அதனாலேயே, சில சமயம் வெகு சுவாரசியமாக இருக்கும். அரசியல் தொடர்பான விஷயங்களில், கலைஞர் மீது பெரிதாக ஈடுபாடு ஏதும் இல்லை என்றாலும், சில சமயம் புத்திசாலித்தனமான நகைச்சுவையுடன், பளிச் என்று வந்து விழுகின்ற அவரது பதில்கள் பிடிக்கும். உதாரணத்துக்கு, அப்பேட்டியிலே கேட்கப் பட்ட இரு கேள்விகளும் அதற்கான பதில்களும்

கல்கி : மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று சொல்வார்கள். அந்த அடிப்படையில், ஜெயலிதா அவர்களிடம் உங்களுக்கு பிடித்தது என்ன ?

கலைஞர் : மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று தெரியும், ஆனால் போயஸ் தோட்டத்து மல்லிகைக்கு மணம் இருக்கிறதா இல்லையா என்று எனக்குத் தெரியாது.

கல்கி : உங்களுக்கு கார் ஓட்டத் தெரியுமா?

கலைஞர் : இல்லை. அந்த முயற்சியில் நான் ஈடுபடாமல் இருப்பது, மக்கள் மீது எனக்கு உள்ள அன்பைக் காட்டுகின்றது.

இப்பேட்டி எடுக்கப் பட்ட காலகட்டத்திலே , பா.ராகவன் கல்கி ஆசிரியப் பொறுப்பில் இருந்தார். அவரிடம் விசாரித்தால், ஏதாவது விஷயம் கிட்டும். நாளை பேச வேண்டும்.

Comments

Popular posts from this blog

புரியாத பத்து விஷயங்கள்

மிக்ஸர் - I

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?