Su.Ra, Vittal Rao, Vintage Film Club & KolangaL

சுந்தர.ராமசாமி சென்ற ஆண்டு அக்தோபரில் மறைந்தார்.

கைக்குக் கிடைத்ததை படித்துக் கொண்டு, படிக்கக் கிடைத்ததையே உன்னதமான இலக்கியம் என்று நினைத்துக் கொண்டிருந்த காலத்தில், அவருடைய எழுத்துக்கள் தான் நவீன இலக்கியத்துக்கு ஒரு வாசலாக இருந்தது. கார்ட்டலுக்கு வெளியே இருந்தவர்களை கொஞ்சம் பரிவுடன் பார்த்தவர் என்ற வகையில், அவரைக் கொஞ்சம் அதிகமாகவே பிடிக்கும்.

சில வருடங்களுக்கு முன்பு, பேச்சினிடையே, ஒரு முறை ஜே.ஜேவை சிலாகித்த போது ( கொஞ்சம் ஓவராக) , நண்பர் ஒருவர், " grow up man " என்று சிரித்துக் கொண்டே சொன்னார். வளர்ச்சி என்றால் என்ன என்று தெரியாததால், அவர் சொன்னதைக் கண்டு கொள்ளவில்லை.

அவர் மறைந்து ஓர் ஆண்டு ஆனதை ஒட்டி, தமிழ்ப்பதிவுகளில் யாராவது ஏதாவது எழுதியிருக்கிறார்களா என்று கூகிள் வழியாகத் தேடிய பொழுது, வெறுமைதான் பதிலாகக் கிடைத்தது.

ஆங்கில, வலைப்பதிவு நண்பர், நந்து சுந்தரம், சு.ரா. நினைவாக, இம்மாதம் முழுதும், சு.ரா பற்றிய வலைப்பதிவுகளைத் தொகுக்கப் போவதாகத் தன் இடுகை ஒன்றில் சொல்லியிருந்தார். எத்தனை தேறும் என்ன்று தெரியவில்லை.

உபரித் தகவல் : நந்து சுந்தரம், சு.ராவின் பேரன்.

**********

ஒரு ஒழுங்குமுறையுடன், இலக்கியத்தை அணுகுபவர்களுக்கு இந்தப் பிரச்சனை ஏற்படுகிறதா என்று தெரியாது., ஆனால், எனக்கு அவ்வப்போது நேர்கிறது. நான் எதையாவது புதிதாக கண்டு பிடித்ததாக நினைக்கும் பொழுது, அது ஏற்கனவே கண்டுபிடிக்கப் பட்டதாக இருக்கிறது. இன்னும் கொஞ்சம் விரிவாகச் சொல்ல வேண்டும் என்றால், விட்டல்ராவ் என்கிற எழுத்தாளரை சமீபத்தில் கண்டு பிடித்தேன்.

" கண்டு பிடிச்சியா?.... அவர் அங்கதானே ரொம்ப நாளா இருக்கார்"

மன்னிக்கவும். வாக்கியத்தை கொஞ்சம் மாற்றி அமைக்கிறேன். விட்டல் ராவ் என்கிற சினிமா எழுத்தாளரைக் கண்டு பிடித்தேன். நான் படிக்க விட்டுப்போன, படிக்க மறுத்த, படித்தாலும் பிடிபடாத, ஒழுங்காகப் படிக்கத் துவங்குமுன்னரே எழுதுவதை நிறுத்திய எழுத்தாளர்கள் பட்டியல் ஒன்று உண்டு. விட்டல்ராவ் அதிலே ஒருவர். வாசிக்கத் துவங்கிய தொண்ணூறுகளில், இலக்கிய பீடத்தில் அமர்ந்திருந்தவர்களைத் தவிர்த்து, முந்தைய தலைமுறையினரை படிப்பது fashionable இல்லை என்று நினைத்ததுதான் காரணம். இப்போதும் கூட, கர்நாடக நாட்டுபுறவியலையும் , பொம்மலாட்டக் கலையையும் மையமாக வைத்து புனைந்ததை எல்லாம் வாசிக்கும் எண்ணம் இல்லை. அப்படி எழுதியிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ளுவதே போதுமானதாயிருக்கிறது. குற்றம் சொல்லுங்கள், ஆனால் நிலைமை அதுதான்.

இப்படியிருக்க, அவர் நிழல் என்ற 'இருமாதத்துக்கொருமுறை' இதழில் எழுதி வரும் கட்டுரையின் முதல் பகுதியை தற்செயலாகப் படிக்க நேர்ந்து, இப்போது தொடர்ச்சியாகப் படித்துக் கொண்டு வருகிறேன். கன்னடப் படங்களின் வரலாறு பற்றிய தொடர். கன்னடத்தின் மிக முக்கியமான திரைப்படங்களின் தகவல்கள், சமகாலப் படங்களுடனான ஒப்பீடு, கலைக்கும் அரசியலுக்குமான உறவு ஆகியவற்றை அழகாகப் படம் பிடித்து எழுதி வருகிறார்.

இந்த இதழில், சோமனதுடி' என்கிற, சிவராம காரந்த் எழுதி, பி.வி.காரந்த் இயக்கிய திரைப்படம் பற்றிய கட்டுரை, அவசியம் படிக்க வேண்டிய ஒன்று. சோமன் என்கிற விவசாயி, இருபது ரூபாய்க்கு தன் நிலத்தை 'ஆண்டையிடம்' அடகு வைத்து விட்டு, அதை மீட்க தன் நிலத்திலேயே கூலியாளாக வாழ்நாள் முழுவதும் வேலை செய்கிறான், என்றாவது ஒருநாள் தன் நிலத்தை மீட்க முடியும் என்ற நம்பிக்கையில். அவனுடைய மக்களும், அதே நிலத்தில் அடிமைகளாக வேலை செய்கிறார்கள். இப்படிப் போகிறது கதை. அந்த விரிவான கட்டுரையில், முழுப் படமும் கண்முன் விரிகிறது.

சினிமா குறித்த எழுத்துப் பிரதிகளைத் தேடினால், நமக்குக் கிடைப்பது, ·பிலிம் ந்யூஸ் ஆனந்தன், அறந்தை நாராயணன் போன்றவர்களின் தகவல் களஞ்சியங்கள் அல்லது தியோடர் பாஸ்கரன் போல அகடமிக்கான ஆய்வுக்கட்டுரைகள்.

ஆனால், விட்டல்ராவ் சைக்கிள் கேப்பில் ஆட்டோ ஓட்டுகிறார். அதிலும் அட்டகாசமாக.

**********

சென்னையிலே வின்டேஜ் ·பில்ம் க்ளப் என்று ஒன்று இருக்கிறது. இந்தச் சங்கத்தின் முக்கியமான வேலையே, பிரதிமாதம் இரண்டாவது சனிக்கிழமை அன்று , அரதப் பழசான கிளாசிக் தமிழ்ப் படங்களை, தனிக்காட்சியாகத் திரையிட்டு, பார்த்து ரசிப்பதுதான். போன மாதம் என்ன படம் தெரியுமா? 'ரம்பையின் காதல்'. ஐம்பதுகளில், ஜெமினிகணேசன் நடித்து வெளிவந்த படமல்ல. 1939 இலே, சாரங்கபாணி, கே.எல்.வி. வசந்தா நடித்த படம்.

சென்னையில் வசிப்பவர்கள் யாராவது கிளப்பிலே சேரவேண்டும் என்று நினைத்தால், எனக்கு தனி மடல் அனுப்புங்கள். நான் ஒரு தொலைபேசி எண் தருகிறேன். அங்கே தொடர்பு கொள்ளுங்கள்.

*************

"If rape is inevitable lie down and enjoy it" என்று யாரோ ஒரு MCP பரப்பியதை நானும் படித்திருக்கிறேன். அந்த தத்துவத்தின் அடிப்படையில் நானும் 'கோலங்கள்' பார்க்கத் தொடங்கிவிட்டேன். தினமும், ஒன்பது மணிக்கு தொலைக்காட்சியை ஆக்கிரமிப்பு செய்பவர்களை, எதிர்க்கத் திராணி இல்லை. பல ஆண்டுகளாக வந்து கொண்டிருக்கும் இந்த மெகாத் தொடரை கடந்த பத்து நாளாகத்தான் பார்க்கிறேன். ஆனால், கதை தெளிவாகப் புரிகிறது.

********

ஒரு tag பாக்கி இருக்கிறது. பிரேமலதா, போட்டுடறேன், சீக்கிரமாகவே..

*********

Comments

Anonymous said…
thanks for the mention, prakash. but surely u realise this only put additional pressure on me to find something good. i was more like a sentimental and pointless trip so far. but that is not a problem.
there is a new edition of jj out with drawings. i guess u wuld be interested in having a look at that.
nandhu : welcome.

i was more like a sentimental and pointless trip so far. but that is not a problem.

I would be more interested in someting personal and sentimental. Do write.

there is a new edition of jj out with drawings.

yes. I would be interested. thanks for dropping by
பிரகாஷ்,

விட்டல்ராவ் பன்முகம் கொண்டவர். சிறந்த சிறுகதைகள் மற்றும் நாவல்கள் (நதிமூலம்) எழுதியவர். ஓவியர், அரிய தகவல்களுடன் கூடிய சினிமா கட்டுரைகளை சுவாரசியமாக எழுதியவர்.

Popular posts from this blog

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

9 weird things about prakash

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்