ராஜா யார்?

Mathematics is the Queen of Sciences என்று ராமசுப்பு ( கணித வாத்தியார்) , ஒரு மத்தியான வேளை வகுப்பில் திட்டவட்டமாக அறிவித்த போது, அந்த வயசுக்கே உரிய குறும்புத்தனத்தால், " அப்ப ராஜா யாருங்க சார்" என்று பின்பெஞ்சில் இருந்து குரல் கொடுத்து, ஸ்கேலால் பிட்டத்தில் அடிபட்டது நினைவுக்கு வருகிறது. " ராஜா யார் ? " என்ற கேள்விக்கு இன்றைக்கும் எனக்கு பதில் தெரியாது. "என்னுது தான் ராஜா உன்னுது கூஜா" என்று துறை வல்லுனர்கள் அடித்துக் கொள்கிறார்களோ என்னமோ... அதுவும் எனக்குத் தெரியாது...

ஆராய்ச்சிகள், பட்ட படிப்பு , பட்ட மேற்படிப்பு என்ற அளவிலேயே அறிவியலை பல துறைகளாகப் பிரித்துப் போட்டிருக்கிறார்கள் என்று இன்றைக்குத் தெரிந்தாலும், சீருடை அணிந்து பள்ளிக்குச் சென்ற காலங்களில், அது வேதியியல், இயற்பியல், உயிரியல் என்று மூன்றாக மட்டுமே பிரிக்கப்பட்டிருந்தது. அதிலே, வேதியியலையும் உயிரியலையும் விட்டுவிடலாம். ஏனெனில், அவை டப்பா அடித்து மதிப்பெண் பெற ஏதுவானவை. கொஞ்சம் வரைகலை வித்தை தெரிந்தால், உயிரியலில் நல்ல மதிப்பெண் பெற்றுவிடலாம். இவை எல்லாம் நான் படித்த காலத்தின் சூக்குமங்கள். தற்போதைய நிலைமை குறித்து எதுவும் தெரியாது என்பதையும் பகிரங்கமாக ஒத்துக் கொண்டு விடுகிறேன்.

இதிலே தனித்து விடப்பட்டிருப்பது, இயற்பியல் சாதாரணர்களாலும், இயல்பியல் என்று பெரியவர்களாலும் அழைக்கப்படும் பௌதிகம். இது கொஞ்சம் குண்ட்ஸான மேட்டர்.. புரிகிற மாதிரி இருக்கும். ஆனால் முழுமையாகப் புரியாது. அதே சமயம் எதுவுமே புரிந்துத் தொலைக்காமல், டப்பா தட்டி முடித்துத் தூங்கும் போது, படித்தவற்றை நினைவு கூர்ந்து பார்த்தால், பளிச் பளிச் என்று புதிர்கள் அவிழும். இந்த இயற்பியல் பாடம், ஒரு மாணவனுக்குப் பிடிப்பதும் , பிடிக்காமல் போவதும், அதனைச் சொல்லித் தருகின்ற ஆசிரியர்களின் திறனைப் பொறுத்த விஷயம் என்பதில், எள்ளளவும் சந்தேகமில்லை. சொந்த அனுபவத்தில் இருந்து சொல்கிறேன்.

குழந்தைகளுக்கும், பள்ளி மாணவர்களுக்கும், கணிதத்தை எளிமையாக அறிமுகப் படுத்துவதற்கும், விளையாட்டுக்கள், புதிர்கள் மூலம், கணிதத்தின் பால் நாட்டம் கொள்ளச் செய்வதற்கும், சில புத்தகங்கள், கருவிகளைப் பார்த்திருக்கிறேன். அதே போல, அறிவியலின் மற்ற துறைகளிலும் அதே போல இருக்கின்றதா என்று தெரியவில்லை. நான் சொல்வது எளிமையாக எழுதப்பட்ட புத்தகங்களை மட்டுமல்ல. மாணவர்களிடம் இயற்பியலை இன்னும் எளிமையாகவும், சுவாரசியமாகவும் அறிமுகப்படுத்துவதற்கும் ஒரு சர்வதேச அளவில், International Conference on Physics Education ( ICPE) என்ற கருத்தரங்கம் ஒன்று நடைபெறுகிறது.

இந்தக் கருத்தரங்கின் நோக்கமாக அவர்கள் சொல்வது,.

Change in the ways of teaching-learning physics
Change in the understanding of the teaching-learning process
Change in the context of physics as a discipline
Change in the context of physics teaching.
அரங்கைத் துவக்கி, 'PHYSICS EDUCATION IN 2005: FOCUSING ON CHANGE' என்ற பொருளில் அமைந்த தலைமையுரை நிகழ்த்தியவர், அப்துல்கலாம் அவர்கள். இயற்பியலை கற்றுத் தருவதில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து எழுதி வைத்துப் படித்த அவரது உரை கேட்க சுவாரசியமாக இருந்தது. ஆனால், நம்முடைய தற்போதைய கல்வி முறையிலே , அந்த யோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியம் எவ்வளவு என்றும் தெரியவில்லை.

தொடர்புடைய சுட்டிகள் :

1. அப்துல் கலாம் அவர்களின் முழு உரை இங்கே கிடைக்கும்

2. International Conference on Physics Education ( ICPE) இன் இணையத்தளம்

3. வெங்கட்டின் இயற்பியல் வலைப்பதிவு

Comments

SnackDragon said…
பிரகாஷ்,
தகவலுக்கு நன்றி + test
Linux for you பத்திரிக்கையில் Electronics for you group வெளியிடும் நிறைய கிட் ('குழந்தை' இல்லை-kit) பற்றிய விளம்பரங்கள் பார்த்து இருக்கிறேன். ஆர்வத்தைத் தூண்டும் வகையில், நாமே பாகங்கள் பொருத்தி ரேடியோவில் ஆரம்பித்து இன்னபிற கருவிகளைச் வடிவமைப்பது போல் 'கிட்'கள் இருக்கிறது. ம்ம்ம்ம்.... மின்னயே தெரிஞ்சுருந்தா ஏதோ ஆர்வம் வந்து இருக்கு. கடைசில சைன்சும் தெரியாம, காமர்சும் தெரியாம, வொக்கேஷனலாவும் எதுவும் பண்ணாம அக்கேஷனலான சந்தோஷங்களோட வாழ்க்கையும் ஏதோ ஓடுது. :-)

க்ருபா
//கடைசில சைன்சும் தெரியாம, காமர்சும் தெரியாம, வொக்கேஷனலாவும் எதுவும் பண்ணாம அக்கேஷனலான சந்தோஷங்களோட வாழ்க்கையும் ஏதோ ஓடுது. :-)//

ஆஹா... கவித கவித.....

Popular posts from this blog

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

9 weird things about prakash

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்