டூரிங் டாக்கீஸ்

[ [ இந்த வார நட்சத்திரத்தின் சமீபத்திய பதிவின் பாதிப்பில்]]

சென்னைக்குக் குடிபெயர்ந்த நாட்களில், பாட்டியுடன் தான் வாசம் என்பதால், சினிமா பார்க்கிற வாய்ப்புகள் ரொம்ப அபூர்வமாகவே கிடைக்கும். இத்தனைக்கும் நாலு கட்டிடம் தள்ளி கபாலி டால்கீஸ் ( அது டாக்கீஸ் என்று பின்னாளில் தான் தெரிய வந்தது ). காலைக் காட்சியில் வடிவுக்கு வளைகாப்பு, காத்தவராயன், டவுன்பஸ் போன்ற படங்களும், ரெகுலர் காட்சிகளில், செகண்ட் ரீலிஸ் புதுப்படங்களும் வரும். கூட்டிப் போவதற்கு யாரும் கிடையாது. பள்ளிக்கூடம் போகும் போது நைசாக தியேட்டருக்குள் போய், வெல்வெட்டு போர்டில் ஒட்டப்பட்டிருக்கும் புகைப்படங்களை எல்லாம் வாயில் ஈ புகாமல் பராக்கு பார்த்துக் கொண்டிருந்த போது, அந்த வழியாக போய்க்கொண்டிருந்த விசாலம் மாமி ( எங்க ஒண்டுக் குடித்தன வீட்டின் நெய்பர்), பாட்டியிடம் போட்டுக் கொடுக்க, " வரட்டும் ஙொப்பன் கிட்ட சொல்றேன்.. என்று மிரட்டிக் கெ¡ண்டே இருந்தாள். 92 ஆம் வருஷத்தில் அவள் செத்துப் போகிற வரையிலும் சொல்லவே இல்லை.

அக்கம்பக்கத்தில் இருக்கிறவர்கள் எல்லாம் 'ரெக்கமெண்டு' செய்தார்கள் என்ற காரணத்துக்காக, முதல் முறையாக எனக்கு சினிமா அனுமதிக்கப்பட்டது. கட்டிடத்தில் இருந்த ஏழு குடும்பங்களும் ஒட்டு மொத்தமாகக் கிளம்பிப் போன போது, அ¨ரடிக்கிட்டு நானும் ஒட்டிக் கொண்டேன். படம் சங்கராபரணம். இன்றைக்கு இந்திய சினிமாக்களில், விரல் விட்டு எண்ணக்கூடிய க்ளாசிக்குகளில் அதுவும் ஒன்று என்றோ, கே.விஸ்வநாத், திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன், எஸ்.பி.பலசுப்பிரமணியம் ஆகியோரின் கடுமையான உழைப்பும் அபூர்வமான திறமையும் சங்கமித்த படம் அது என்றோ எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. நிஜமாகவே ஏண்டா போனோம் என்று தான் இருந்தது. அகலத்திரையும், நிழல் உருவங்களும், கபாலி மாதிரியான 'டொச்சு' தியேட்டரிலேயே பிரமிக்க வைத்தன என்றாலும், ஒன்றும் புரியவில்லை என்பதால், ரொம்ப நேரத்துக்கு என்னைக் இருக்கையில் உட்கார வைக்க முடியவில்லை.

அது தொடங்கி, எத்தனை திரைப்படங்கள்? மாதம் ஒரு முறை அம்மாவின் வருகையை முன்னிட்டுக் கிடைக்கும் சலுகையில் பார்த்த படங்கள்? ( படிக்கிற புள்ளையை ஏன் இப்படி சினிமாவுக்கு கூட்டிக் கொண்டு போய் கெடுக்கணும்? என்று பாட்டியின் முணுமுணுப்பும், அதைத் தொடர்ந்த வாக்குவாதங்கள், வெள்ளைக் கொடி சமரசங்கள் எல்லாம் இன்னொரு §சரன் படம் எடுக்கிற அளவு தாங்கும்), முந்தானை முடிச்சு படத்துக்கு கூட்டிப் போகமாட்டேன்று என்று சொல்லி விட்டு, பிடிவாதம் பிடிக்காமல் இருக்க கொடுத்த இருபது ரூபாய் லஞ்சப்பணம், மெட்ராஸை சுத்திப் பார்க்கப் போறேன் என்று படையாகக் கிளம்பி வரும் அத்தை மாமா சித்தி சித்தப்பா கோஷ்டியுடன் ஒட்டிக் கொண்டு பார்த்த படங்கள்? 95 காசில் இருந்து 1.30, பிறகு 1.90, பிறகு 2.30 பிறகு 2.90 என்று 4 ரூபாய் ஆகிற வரை, படங்கள் பார்த்துக் கொண்டிருந்தேன். காமதேனு தியேட்டருக்கு அதிகமாகப் போனது கிடையாது.

கால்பரீட்சை, அரைப்பரீட்சை விடுமுறைக்குப் போனால், ஊரில் இருந்த 'கொட்டாயில்' ஒன்று அல்லது இரண்டு படங்கள் பார்க்கலாம். அதுக்கு அனுமதி வாங்கப் படுகிற பாட்டுக்கு, பேசாமல் படமே வேண்டாம் என்று சொல்லியிருக்கலாமே என்று இப்போது தோன்றுகிறது. எட்டு இடமும் குளிர்ந்திருக்கிற நேரமாகப் பார்த்து, முதலில் அக்காவை விட்டு நோட்டம் பார்த்து, இதமாகப் பதமாகப் பேசி, அனுமதி வாங்குவதற்குள் உன் பாடு என் பாடு என்றாகிவிடும். " ஏம்ப்பா அப்ப எங்களை அப்படி படுத்தி எடுத்தே" என்று இப்போது கேட்டால் சிரிக்கிறார்..

"ரெக்கை மொளைச்சுடுத்து... பறந்துடுத்து... "என்று பாரிஸ்டர் ரஜினிகாந்த், கௌரவம் படத்தில் நா தழுதழுக்கச் சொல்வாரே.. அந்த மாதிரி, எனக்கும் ரெக்கை முளைத்து, நண்பர்கள் வீடு, என்று தனியாகச் சுற்ற ஆரம்பித்த காலத்திலே த¡ன், கபாலி தவிரவும், இன்ன பிற அழகான தியேட்டர்கள் இருப்பதே தெரியவந்தது... கால் பரீட்சை, அரைப்பரீட்சை நாட்களில் ஊருக்கு போகவேண்டாம் என்று சலுகை கிடைத்த பிறகு, கையிலே பத்து ரூபாயுடன் புறப்பட்டு 21 ரூட் நம்ப¨ரப் பிடித்தால், ராயப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் பக்கத்தில் பைலட். அனேகமாக அங்கே ஆங்கிலப்படங்கள் மட்டுமே §பாடுவான். நடை தூரத்தில் உட்லண்ட்ஸ் தியேட்டர் ( jo jeeta wohi sikander) .. அப்படியே போய், ராயப்பேட்டை மணிகூண்டைத் தாண்டினால் அப்போது ஓடியன் என்றும் இப்போது மெலோடி என்றும் அழைக்கப்படும் தியேட்டர் வரும் ( tezaab), அதைத் தாண்டி வலது பக்கம் திரும்பினால், காங்கிரஸ் அலுவலகம் பக்கத்தில் லியோ, மிட்லண்ட் ( ராஜ் ,ஜெயப்பிரதா), ஜெனரல் பேட்டர்ஸ் சாலையில் அலங்கார் தியேட்டரின் பின்வாசல் ( மாப்பிள்ளை), சாலை முனையில் வெலிங்டன், புகாரி ஓட்டலைத் தாண்டினால், காஸ்மாபாலிடன் கிளப் ( இப்போது சுகுண விலாஸ் சபா, SVS Club) பக்கத்தில் ப்ளாசா ( பிரமீளா நடித்த மலையாளப்படம், பெயர் தெரியாது), அதற்கு ஒரு பத்து கட்டிடம் தாண்டி தேவி வளாகம், பக்கத்தில் சாந்தி, அண்டர் கிரவுண்டில் அண்ணா, எதிர்ப்புறம் போனால், பிளாக்கர்ஸ் சாலையில் கெயிட்டியும் கேசினோவும் ( எத்தனையோ ஆங்கிலப் படங்கள்). அதைத் தாண்டி பாலத்தில் ஏறி இறங்கி வலப்புறம் புதுப்பேட்டை நுழைகிற வழியில் சித்ரா ......

சில வாரத்துக்கு முன்பு, பிலிம்சேம்பரில், குறும்பட விழா பார்த்து விட்டு நாராயணும் நானும் தேனீர் குடிக்க சென்ற போது, சபையர் தியேட்டர் இருந்த இடத்தில் பொட்டல் வெளியைப் பார்த்தேன். ஒரு காலத்தில், ultra modern தியேட்டராக விளங்கிய அது, இப்போது மூச்சாவை அடக்க முடியாதவர்களுக்கு, விவேக் பாஷையில் சொன்னால், open university ஆகப் பயன் படுகிறது. ஹ்ம்ம்ம்ம்ம்ம்....

அங்கே qayamat se qayamat tak படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்று சத்தியமாக நினைவில்லை.

அப்போது கையில் கிடைக்கும் சில்லறைப் பணத்தை வைத்துக் கொண்டு சென்னையை, நண்பர்களுடன் சுற்றி வந்திருக்கிறோம்..நிறைய தியேட்டர்கள் இப்போது இல்லை. அலங்கார் இருந்த இடத்தில் உலகவங்கியின் பின்வாசல் ( அதாங்க backoffice) இருக்கிறது... ப்ளாசா இப்போது வணிக வளாகம்..சித்ராவை அப்போதே இடித்து விட்டார்கள். ஏதோ சந்திரமுகி வந்தது..சாந்தி பிழைத்தது... க்யூவில் டிக்கெட் வாங்கி, ஸ்கூலுக்கு கட் அடித்து விட்டு, சீருடைக்கு மேலே ஒரு டிஷர்ட் அணிந்து கொண்டு, தெரிஞ்சவங்க யாராவது பார்த்துடப் போறாங்களோ என்று கும்பலோடு உட்கார்ந்து பார்க்கிற அனுபவம் போயே போச்சு.

"டேய் எங்கே போற...சரி...போனமா வந்தமான்னு இருக்கணும்." . என்று மிரட்ட பாட்டி இல்லை. "ப்பா ப்ளீஸ்ப்பா... சகலகலாவல்லவன் படம்பா...' இப்படம் இன்றே கடைசி' ன்னு போஸ்டர் கூட ஒட்டிட்டான்ப்பா" .. என்று கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை, "ரெண்டு தொண்ணூறு x ஆறு = இருவத்து மூணு ரூபாய் இருவது பைசா... இன்னும் மூணு ரூபாய் ஒதைக்குதே, எங்க உஷார் செய்யலாம் என்று தோஸ்துகளுடன் கூட்டுச்சதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. தெரிந்தவர்கள் யாராவது வந்து விடப்போகிறார்களோ என்று பயந்து பயந்து, காலைக்காட்சிக்குப் போகவேண்டியதில்லை...

இப்போதெல்லாம், இது பிரச்சனையே இல்லை.. எல்லாம் கைக்கெட்டுகிற தூரம் தான்..... ஆனால், சினிமா பார்த்தல் என்கிற விஷயத்தின் நிஜமான pleasure தொலைந்துவிட்டது.

இது ஒரு தொடர் பதிவு [ theme : இளவயது + சினிமா + நினைவுகள் ]

அடுத்து தொடர்பவர் பத்ரி

Comments

ப்ரகாஷ்ஜி,

//எல்லாம் கைக்கெட்டுகிற தூரம் தான்..... ஆனால், சினிமா பார்த்தல் என்கிற விஷயத்தின் நிஜமான pleasure தொலைந்துவிட்டது.
//

சத்தியமான வார்த்தைகள். எல்லாம் டிவி மூலமாக வரவேற்பறைக்குள் அடங்கிவிட்டது. :(

அழகான பதிவு.

இற(ழ)ந்த கால நினைவூட்டல்கள் அலாதியானதொரு விஷயம்.

நன்றி.
SnackDragon said…
அழகான பதிவு. நிறைய பேருக்கு பொருந்தும். :-)
என்ன சஃபையர் தியேட்டர் இல்லையா? ஐய்யய்யோ, அங்கே அந்த ப்ளூ டயமண்டிலே எத்தனை
படம் பார்த்திருக்கேன். ஆராதனா, கட்டிபதங், ஹரே ராமா ஹரே க்ருஷ்ணா( தம்மாரோ தம்....)
அப்புறம் அந்தப் படம் 'கோஷிஷ்'னு, என்ன ஒண்ணு ஹிந்தி ஒண்ணும் சரி(?)யாத் தெரியாது!
எல்லாம் 'படம் பார்த்துக் கதை சொல்' தான்.

அப்புறம் அங்கேயே மாடியிலே இன்னொரு தியேட்டர் இருந்துச்சேப்பா, பேர் மறந்து போச்சு, அங்கே
தொடர்ந்து ஒரு படம் ஓடிக்கிட்டே இருக்குமே, 'எப்பவேணாப் போலாம் எவ்வளோ நேரமானாலும்
இருக்கலாமு'ன்னு.

வெஸ்ட் மாம்பலம் நேஷனலை விட்டுராதீங்க. அதுதான் என் பழைய பட ஆசைக்குத் தோது.
அய்யோ, இப்படி எல்லாத்தையும் ஞாபகப்படுத்திட்டீங்களே!!!
உங்க பதிவ இன்னும் படிக்கல... ஏன்னா படிக்க முடியல... மொதல்ல இந்த font sizeஅ பெரிசு பண்ணுங்க ப்ரகாஷ்... இல்ல கண்ணு டாக்டர் பில்ல உங்களுக்கு அனுப்ப வேண்டி வரும்...
Vassan said…
லேசான பதிவுக்கு நன்றி பிரகாஷ். படிக்க பிடித்துள்ளது.

78-79 ல் தொழில் நுட்ப கல்லூரியிலிருந்து சென்னை துறைமுகத்திற்கு field trip போயிருந்தோம்.

109 - செங்கோட்டை பேசஞ்சரில் போகும் போதே சஃபையர் போய் ஸ்டார்வோர்ஸ் பாக்கணும் திட்டம் போட்டு இருக்கற காசெல்லாம் ஒன்று சேர்த்து வைத்துக் கொண்டோம்.

கடைசி வரிசையில் இடம் கிடைத்தது. கொட்டகைக்கு உள்ளே போனவுடன் தெரிய வந்தது, ஸ்ரீதேவி படம் பார்க்க வந்துள்ளார் என்று. திரும்பி, திரும்பி பார்த்து கழுத்து வலி எல்லா பசங்களுக்கும்.

=
சென்னை முன்னேறுகிறது என்கிறார்கள், ஆனால் பொதுவிட கழிப்புகள் நடக்கின்றனவா ;(
//அப்புறம் அங்கேயே மாடியிலே இன்னொரு தியேட்டர் இருந்துச்சேப்பா, பேர் மறந்து போச்சு, அங்கே
தொடர்ந்து ஒரு படம் ஓடிக்கிட்டே இருக்குமே, 'எப்பவேணாப் போலாம் எவ்வளோ நேரமானாலும்
இருக்கலாமு'ன்னு.//

துளசி, அது எமரால்ட் தியேட்டர், ரொம்ப விஷேஷமானது, ஜோடிங்க விரும்பி போற தியேட்டர்!
ஐயர் said…
இவ்ளோ ஜொள்ன நீங்க 11 மணி காட்சிக்கு போன நூஸை மட்டும் கடேசி வரைக்கும் ஜொள்ளவே இல்லியே...???
உதயகுமார்,

நன்றிங்க. எமரால்ட். ஆமாம். அதென்ன 'ஜோடிங்க ஸ்பெஷல்'னு சொல்லிட்டீங்க? மெட்ராஸ் வர்றவங்க வெய்யிலுக்குத் தப்பிக்க அவுங்க ட்ரையினோ, பஸ்ஸோ புறப்படற நேரம் வரை அங்கே தூங்கிக்கிட்டு இருக்கறதைப் பார்த்திருக்கேன்.
ஜோ/Joe said…
நல்லாயிருக்கு .திருச்சியில் கல்லூரி நாட்களில் எல்லா பசங்களும் புது படங்களுக்கு படையெடுக்க ,நான் தனியாக சந்து பொந்து டூரிங் டாக்கீஸுகளை கண்டு பிடித்து பழைய சிவாஜி படம் பார்த்துத் தள்ளியது நினைவுக்கு வருகிறது.
Pavals said…
நம்ம ஊட்டுபக்கமும், பொள்ளாச்சி சின்னாம்பாளாயத்துல தினகரன் டாக்கீஸ்ன்னு ஒன்னு இருந்துச்சுங்க, வானம்பாடி பாயும்புலி, சகலகலவல்லவன், தூங்காதே தம்பி தூங்காதேன்னு, எல்லா படத்தையும் ரெண்டு மூனு வாட்டி பார்த்து சலிச்ச இடம்.. வெறும் 75பைசா டிக்கெட்டுல, இப்ப அந்த தியேட்டர் இருந்த இடத்துல சுத்து வட்டாரத்துக்கு சம்பந்தமில்லாம ஒரு பங்களா கட்டியிருக்காங்க.. ம்ம்.. அது ஒரு அழகிய நிலாக்காலம்..
சினிமாவைச் சுற்றியுள்ள பிற விஷயங்களுக்காக ஃபீலாகியிருக்கிறீர்கள் என்று புரிகிறது. ஆனால் சினிமா பார்க்கிற நிஜமான pleasure தொலைந்துவிட்டதாக சொல்லியிருப்பது புரியலையே தலைவா. நல்ல சினிமாவின் pleasure இன்னும் அதனுள்ளே தான் இருக்கிறது.
பின்னூட்டம் அளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

முகமூடி : அவ்ளோ மோசமாவா இருக்கு? சரி பண்றேன்.

சிசியா மீனாக்ஸ் : நோஸ்டால்ஜியா போஸ்ட் போடும் போதெல்லாம், கட்டக்கடேசியிலே, செண்டிமெண்ட் சேரன் மாதிரி, ( அர்த்தம் வருதோ இல்லையோ ) ஒரு பஞ்ச் லைனுடன் முடிக்க வேண்டும் என்று தமிழ் மரபு சொல்லுது சிசியா...:-)
Dubukku said…
ரொம்ப சரிங்க...இப்போ சினிமான்னா ஒரு த்ரில்லே இல்லைங்க...

உங்க போலீஸ் பதிவில் கேட்ட கேள்விக்குப் பதில் Hemel Hempsteadலிருந்து எங்க ஊர்..கொஞ்சம் தள்ளிங்க 40 mins drive.
அதனால தப்பிச்சோம். ப்ரேமலதா பாலன் தம்பதியினர் எங்க வீட்டுக்கு வந்துட்டு காலைல கிளம்பி போனாங்க.... நல்ல வேளை 6:30 மணிக்குப் போய் சேர்ந்தாங்க..அவங்க தான் மயிரிழைல தப்பிச்சிருக்காங்க...
குருநாதர் பிரகாசரே..!! உங்கள் பதில் கண்டு தெளிவு பெற்றோம். வாழ்வில் உய்வு கொண்டோம்.

Popular posts from this blog

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

9 weird things about prakash

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்