தாடியும் மீசையும் கிளம்பும்போது ஒரு பெங்காலி கடையில் திருட்டு ரெயில் படுக்க உதவும் என்று திருடிக் கொண்டு வந்த தடிமனான ஆங்கில புத்தகங்களையும் பார்த்த சக திருட்டு பயணிகள் கோவாலுவினை ஏதோ அறிவுஜீவியாக நினைத்தார்கள். அதற்கும் வந்தது ஆப்பு. சென்ட்ரலில் இறங்கி டிக்கெட் இல்லாமல் மாட்டியதால், எதிரே இருக்கின்ற ஜெயிலில் கொண்டு போய் காவலில் வைத்து விட்டார்கள். ஏதோ பேரணி, ஊர்வலம் நடத்தி வெள்ளிக்கிழமை உள்ளே தள்ளி திங்கள் கிழமை ஜாமீனில் வெளிவரக் கூடிய ஒரு அரசியல் தலைவர் கோவாலு இருந்த அதே செல்லில் இருந்தார். பெரியார் பற்றியும், சமஸ்கிருதம் பற்றியும், எம்.ஜி.ஆர் பற்றியும் பேசியதை பார்த்த அவர் கோவாலுவிற்கு மூலதனம் நூலை கொடுக்க, பொழுது போகாமல் அப்படியே படித்து முடித்த கோவாலு, கொஞ்ச நாள் கழித்து துரத்தியடிக்கப்படும் போது, புதிதாக வகுப்பு வாத பிரதிநிதித்துவ நிர்மூலம், இனப்பண்பாட்டு முடக்கு இயல் வாதம் என ஜல்லியடிக்க ஆரம்பித்திருந்தான். வெளியே வந்தவுடன் இதை போல உளறியதை பார்த்த் தகரம் கண்டுபிடித்த கம்யுனிஸ்டுகள், கோவாலுவினை அறிவுஜீவியாக கண்டறிந்தார்கள். ஏற்கனவே வாயில் நுழையாத மந்திரங்களை உளறும் கோவாலு, கம்யுனிஸ்டுகள் கொடுத்த தெம்பில், சிகப்பு புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தான். ஏற்கனவே நக்சலைட்டாக வேண்டுமென்ற ஆசையில் படித்து, யோசித்த, காப்பியடித்த விஷயங்கள் வேறு இங்கே உதவியது வேறு விஷயம். கோவாலு தாமரை இதழிலில் ‘நிர்பந்தங்களுட்பட்ட சுற்றுசூழலியலில் முடக்குவாதமும், அமெரிக்க முதலாளித்துவ வல்லரசின் எதிர்மறை தொடர் திணிப்பும் மற்றும் இரண்டு செட்டு இட்லி போண்டாவும்’ என்கிற பெயரில் தனக்கும் புரியாமல், அடுத்தவர்களுக்கும் புரியாமல் எழுதிய கட்டுரை Emperor without Clothes மாதிரி சொன்னால் தப்பாக போய்விடுமே என்கிற நினைப்பிலேயே, எல்லாராலும் பாராட்டு பெற்று, கோவாலு எல்லாராலும் வாசிக்க படக்கூடியவனாக மாறி போனான்.
Subscribe to Post Comments [Atom]