இரா.முருகன் + சுஜாதா + அரசூர் வம்சம்

இந்த வாரக்குமுதத்தில் இருந்து... [சுஜாதா எழுதியது]

"... அண்மையில் என்னை இழுத்து வைத்துப் படிக்க வைத்த நாவல், இரா.முருகனின் 'அரசூர் வம்சம்'. தமிழ் நடையில் என்னுடைய பாதிப்பு பலரிடம் இருப்பதைக் கவனிக்கிறேன். முருகனின் தமிழ்நடையில் எல்லாத் தமிழ் எழுத்தாளர்களின் - ஜானகிராமன், புதுமைப்பித்தன், லா.ச.ரா. என்று சொல்லிக் கொண்டே போகலாம். இவர்கள் எல்லோரையும் தன் கம்ப்யூட்டர் திறமை, ஆங்கில உத்திகள் சேர்த்து ஒரு புதிய தமிழ் நடையை உருவாக்கியுள்ளார். அவரது 'அரசூர் வம்சம்' நாவலின் 24-ம் அத்தியாயத்தின் சில பக்கங்கள் இங்கே. இதில் இருக்கும் seduction ஒவ்வொருவரும் வாழ்வில் எப்போதாவது சந்தித்திருக்கிறோம்.


***************

சாமிநாதன் நிறுத்தி நிதானமாக வீட்டுக்குள் ஒவ்வொரு இடமாகச் சுற்றி வந்தான்.

வேதபாடசாலை வித்தியார்த்திகளுக்கு ஆக்கும் போது, இரண்டு அகப்பை அதிகமாகப் போட்டுச் சமைத்து எடுத்து வந்து வைத்துப் போய்விட்டாள் ராமலச்சுமிப் பாட்டி.

புளிப்பும் இல்லாமல், காரமும் இல்லாமல் சின்னக் குழந்தைக்கு நிலாக்காட்டி ஊட்டுவது போல் சாதுவான ரசமும், நெய்யுமாக அன்னம். புடலங்காய் பருப்பு உசிலி. அதில் இழைபடும் வெளுத்த தலைமுடி.

இந்தச் சாப்பாட்டை அவன் போன ஜன்மத்தில் சாப்பிட்டிருக்கிறான்.

ஓ அக்னியே. எங்கள் பிரார்த்தனையைக் கேள். மித்ரனோடும் ஆர்யமனோடும் உன் சிம்மாசனத்தில் வீற்றிரு. நீ இந்திரன் போல் வலிமையானவன். திவோதச மன்னன் உன்னைத் தொழுதான். இந்த மண்ணில் முதலில் அவதரிக்க நீ கருணை கூர்ந்தாய். பிறகு விண்ணேறினாய்.

சாம வேதத்தின் வரிகள் ஒலிகளாக அவன் காதுகளில் இரைந்து ஒலித்தன. அவன் தான் சொல்கிறான். சிரவுதிகள் அடியெடுத்துக் கொடுக்கிறார். அரணிக் கட்டையில் நெருப்பாகப் பிடித்துப் படர்ந்து பரவும் முழக்கம். கம்பீரமாக ஔ¤ர்கிற உடம்பு அவனுக்கு. அவனுக்குச் சிறகுகள் முளைக்கின்றன. அவன் வானத்தில் ஏறிக் கொண்டிருக்கிறான். இரண்டு பக்கமும் சிவப்புக் கொடி பிடித்து யாராரோ அணிவகுத்துப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் அவனோடு பேச வந்தவர்கள். அவன் காலத்துக்கு ஏகமாகப் பின்னால் பிறந்தவர்கள். அவர்கள் காலத்துக்கு அப்புறம் இங்கே எல்லாம் மாறும். மனுஷ்யன் மகத்தானவனாவான். பிசாசுகள் வலுவிழந்து போவார்கள். தெய்வங்களும் தாம்.

அவர்கள் திடமாக நம்பினார்கள். அந்தக் காலம் வந்ததோ என்னமோ தெரியவில்லை சாமிநாதனுக்கு. ஆனாலும் அவர்களைப் பிரியத்துடன் பார்க்கிறான்.

அக்னியே, நீ என் கிரஹத்தின் அதிபதி. என் ஆகுதிக்குக் குருவாக இருந்து வழி காட்டு. எங்கள் குற்றம் குறையனைத்தையும் பொசுக்கிச் சாம்பலாக்கு. எங்கள் பாவங்களைச் சுட்டெறி. தவறு செய்யாதபடி எங்களைத் தடுத்தாட்கொண்டு வழி காட்டு.

எதுக்கு அதெல்லாம் சாமா? இப்படியே இருந்துடலாம்.

குருக்கள் பெண் பின்னால் இருந்து சாமிநாதனைத் தழுவிக் கொள்கிறாள்.

வேண்டாம் வசு. சாமவேதம் சொல்றேன் கேளு. இல்லே, அவாள்லாம் ஏன் சிவப்புக் கொடி பிடிச்சுண்டு போறா தெரியுமா?

எனக்கு எதுவும் தெரிய வேண்டாம்டா சாமா. உன்னோட உடம்பு மட்டும் போறும்.

வசு. வேணாம். சொன்னாக் கேளு. அக்னியே. நாசமாப் போச்சு. ஊஞ்சல்லே படுக்கணுமா?

சாமிநாதன் வாயில் முடி புரள்கிறது.

வசு. வசுமதி. வசு. பசு. சிசு.

அவள் சிரிக்கிறாள். அவன் மேலெ ஏறிப் படர்கிறாள். ஒரு காலால் தரையில் உந்தி உந்தி ஊஞ்சலை அந்தக் கோடிக்கும் இந்தக் கோடிக்குமாக ஆட்டுகிறாள். சாமாவுக்கு மூச்சு முட்டுகிறது. இந்த சந்தோஷத்திலேயே உயிர் போனால் நன்றாக இருக்கும்.

அதுக்கு இன்னும் நேரம் இருக்குடா கட்டேலே போறவனே. ரமிக்கலாம் வா. ஊஞ்சல் நிக்கக் கூடாது. ஆமா, சொல்லிட்டேன். குருக்கள் பெண் அதட்டுகிறதும் அவனுக்குப் போதையேற்றுகிறது.அவள் இரண்டு நாளாகக் கூடவே வளைய வருகிறாள். ராமலச்சுமிப் பாட்டி சாப்பாடு கொண்டு வரும்போது மடிசாரில் கச்சத்தை உருவி விட்டுச் சிரித்தாள். கிழவி தன்னிச்சையாக நடந்ததாக நினைத்துக் கொண்டு, புடவையை வாரிச் சுருட்டியபடி நாணிக் கோணி வௌ¤யே போனாள்.

ஐயணை பகலில் ஒரு தடவையும், ராத்திரி விளக்கு வைத்ததும் இன்னொரு தடவையும் உள்ளே வந்து சாமிநாதனை சௌகரியம் விசாரிக்கும்போது அவன் முதுகில் காலால் உதைத்தாள். ஆனாலும் ஐயணை அசரவில்லை.
அய்யர் வீட்டுப் பொண்ணாச்சேன்னு பாக்கறேன். இல்லே எங்க முனியாண்டிக் கருப்பனை விட்டு உன்னை உண்டு இல்லேன்னு ஆக்கிடுவேன்.

அவன் புஜத்தில் தட்டிக் கொண்டு சொல்லும்போது குருக்கள் வீட்டுப் பெண் பயந்து போய் சாமாவின் தோளைக் கட்டிக் கொண்டாள்.

சாமி, இந்தப் பீடையைச் சீக்கிரம் தொலைச்சுத் தலைமுழுகுங்க. நல்லபடியா தம்பி மாதிரிக் கல்யாணம் பண்ணிக்கிட்டு சுபிட்சமா இருங்க. அவன் வௌ¤யே போனதற்குப் பிற்பாடு அவள் சாமிநாதன் மடியில் உட்கார்ந்து சிரிக்கச் சிரிக்க என்னென்னமோ காட்சி எல்லாம் தெரியப் படுத்தினாள். சுப்பம்மாளின் வாயை வௌ¢ளைத் துணியால் கட்டி மாட்டு வண்டியில் கூட்டிக் கொண்டு போகிறார்கள். சுந்தர கனபாடிகள் வைகையில் குளித்துவிட்டுக் கௌபீனத்தோடு, வேட்டியை உலர வைத்துக் கொண்டு நிற்கிறார். ஒரு பிராமணன் கூவிக் கூவி அழைத்துச் சித்திரான்னம் விற்கிறான். கொலு பொம்மை வர்ணத்தில் முண்டாசு அணிந்த மாட்டுக்காரன் களிமண் பசுவை ஓட்டிப் போகிறான். அப்புறம் ஒரு கிழவன் அரைக் கண்ணை மூடிக் கொண்டே மிதந்து வந்து நின்றபடியே அற்ப சங்கை தீர்த்துக் கொள்கிறான். பாதம் நனைய நனையச் சிரித்துக் கொண்டு வெய்யில் தாழ்ந்த தெருவில் மரத்திலும், மச்சிலும் இடித்துப் புடைத்துக் கொண்டு மிதந்தபடி போகிறான். சங்கரனுக்கு முன்னால் கால் மடக்கி உட்கார்ந்து ஒரு சின்னப் பெண் கீர்த்தனம் பாடிக் கொண்டிருக்கிறாள்.

குருக்கள் பெண் தரையில் கவிழ்ந்து படுத்துக் கொண்டு அடக்க மாட்டாமல் சிரித்தாள்.

சுப்பம்மா அத்தை வாயை என்னத்துக்குக் கட்டி வச்சிருக்கு?

சாமிநாதன் குருக்கள் பெண்ணின் காலை இழுத்து மாலையாகத் தோளில் போட்டுக் கொண்டு கேட்டான். குருக்கள் பெண் சொன்னாள். சாமிநாதன் சிரித்தான். அவன் முழுக்கச் சிரிப்பதற்குள், படுத்துக்கலாம் வா என்றாள் அவள் மறுபடியும். அந்தக் கிழவன். அந்தரத்தில் மிதந்து கொண்டு.

சாமிநாதன் விசாரித்தபோது குருக்கள் பெண் தெரியாதென்றாள். எல்லாத்துக்கும் காரணம் சொல்ல முடியுமா என்ன? நீ கூப்பிட்டு நான் ஏன் வந்தேன்? நாம ஏன் இப்படி பட்சி மாதிரி, பசு மாதிரி இதுமட்டும் தான் எல்லாம்னு சதா கிடக்கோம்?

சாமிநாதனுக்கும் புரியவில்லை. புரிந்து என்ன ஆக வேண்டும்? குருக்கள் பெண் சமையல்கட்டுக்குள் நுழைந்தாள். சாமிநாதன் கூடவே போனான்.

இங்கேயுமா?

ஏன்? இந்த இடத்துக்கு என்ன? மொறிச்சுன்னு பசுஞ்சாணி தௌ¤ச்சு சுத்தம் பண்ணி இருக்கு. ஜில்லுன்னு தரை வா வாங்கிறது பாரு. வா. அவன் மனசே இல்லாமல் உட்கார்ந்தான். உடம்பு எல்லாம் வலித்தது. அக்னி எப்போதோ கூப்பிட்டதை நினைவு வைத்துக் கொண்டு வந்து அவன் இமைகளில் சட்டமாக உட்கார்ந்து தகித்தது.
ராட்சசி கொஞ்சம் அவகாசம் கொடுத்தால் சிரம பரிகாரம் பண்ணிக் கொண்டு கண்ணயரலாம். அயர்ந்த அப்புறம்? வாடா எங்கே ஓடறே படுவா? இங்கே பாரு, சமையல் கட்டுக்குப் பக்கமா அரிசி மூட்டை மேலே ஆத்துக்காரியைக் கிடத்தி.

எனக்கு ஒண்ணும் பார்க்க வேண்டாம்.

எல்லாம் உன் தம்பி கல்யாணம் செஞ்சுண்டு வர சம்பந்தக்காரா தான். இந்தக் கிழவனைப் பார்த்தியோ? தம்பதி ஜோடி சேரும்போது இப்படியா உள்ளே வந்து புட்டத்திலே இடிச்சிண்டு போவான்? சிரிக்கறியாடா? சிரி. உன் மேலே இடிச்சுண்டு போனா சிரிக்க மாட்டே நீ?

அவன் எதுக்கு எனக்கு? நீ ஒரு பிசாசே போறும்டீ. அவள் ஆலிங்கனத்தில் சாமிநாதன் காலுக்குக் கீழே தரை நழுவ இருட்டில் அமிழ்ந்து கொண்டிருக்கிறான். சாமி, இந்தப் பொம்பளை சகவாசம் வேணாம். சொன்னாக் கேளுங்க.
ஐயணை வீட்டுக்குள் காவல் தெய்வம் போல் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டு சொல்கிறான். அவன்
பீஜத்தில் ஓங்கிப் பட, குருக்கள் பெண் ஊஞ்சலை ஆட்டி விடுகிறாள். ஐயணையின் வசவுக்கு சாமிநாதனுக்கு அர்த்தம் புரிபடவில்லை.

மாடிக்குப் போலாம் வாடா. அவள் கூப்பிடுகிறாள்.

ஏன், உள்வீடு எல்லாம் அலுத்துப் போச்சா அதுக்குள்ளேயும்? இப்பவே போனாத் தான் தயாரா இருக்கலாம்.

எதுக்கு?

எது நடக்குமோ அதுக்கு. யார் யார் காலையோ பிடிச்சுக் கெஞ்சிப் பார்த்தேன். எந்தத் தேவிடியாளும் கை கொடுக்க மாட்டேங்கிறாடா பிரம்மஹத்தி.

நீ என்ன கேட்டே? அவா என்ன சொன்னா?

மாடி ஏறிக் கொண்டிருந்த குருக்கள் பெண்ணை இடுப்பைப் பிடித்து இழுத்துத் தலையைத் திருப்பி முத்தினான் சாமிநாதன். அவள் வாயில் மாமிச வாடை வந்தது.

இதெல்லாம் சாப்பிடுவியாடீ நீ? விட்டா நான். அவள் சுட்டிக்காட்ட அவன் அரையைப் பொத்திக் கொண்டு உரக்கச் சிரித்தான்.

வேஷ்டி எங்கேடா கடன்காரா? அவள் கேட்டாள். அது ஊஞ்சலில் பப்பரவென்று கிடந்தது. நீ மட்டும் ரொம்பப் பதவிசா உடுத்திண்டதா நினைப்போ? நான் உனக்கு நூறு இருநூரு வருஷம் முந்தினவடா கழுதே. அப்ப ஏண்டி கூட வந்து படுத்தே? உனக்கு கொள்ளுப் பேரன் எள்ளுப் பேரன் இல்லியாடி நான்?

நீ தாண்டா கூப்பிட்டே என்னை. நான் பாட்டுக்கு எங்கேயாவது தெவசச் சோறு கிடைக்குமான்னு இங்கே நொழஞ்சேன். நம்மாத்துப் பொண்டுன்னு அந்தப் பரதேவதை எல்லாம் சும்மாக் கிடக்க, பொழுது போகாம நான் மாடிக்கு ஏறினா, நீ என்னடா பண்ணினே அயோக்கியா?

இதுதான்.இதேதான்.

சாமிநாதன் அவளுக்குள் ஒடுங்கிக் கொண்டான். இப்படியே இந்த இருட்டில், பழுக்காத் தட்டுக்களைச் சுழல வைத்துக் கொண்டு எல்லாச் சோகத்தையும் கேட்டு அனுபவித்துக் கொண்டு, வௌவால் வாடையும், புகையிலை வாடையும் காற்றில் கவியக் காலமும் நேரமும் தெரியாமல் கரைந்து கரைந்து ஒன்றுமில்லாமல் போய்விட வேண்டும்.

அக்னியே. நீ வரவேண்டாம். நானே தூசியாக எங்கேயும் ஒட்டாமல் உதிர்ந்து விடுகிறேன். உனக்கு என் நமஸ்காரங்கள். அக்னியே உன் வாய்க்கும் ஒரு பெயர் உண்டு. ஜூஹ¥. எங்கள் பிரார்த்தனைகளைத் தேவதைகளுக்குக் கொண்டு போ. என்ன பிரார்த்தனை? வசுவோடு ராத்திரி முழுக்க இணங்கிக் கிடக்கணும். அவ்வளவுதான்.

Comments

/முருகனின் தமிழ்நடையில் எல்லாத் தமிழ் எழுத்தாளர்களின் - ஜானகிராமன், புதுமைப்பித்தன், லா.ச.ரா. என்று சொல்லிக் கொண்டே போகலாம்./
கடைசியாக, சுஜாதாவோடு ஒத்துக்கொள்ளவேண்டி ஒரு வசனம் ;-)
//கடைசியாக, சுஜாதாவோடு ஒத்துக்கொள்ளவேண்டி ஒரு வசனம் ;-) //

முதன்முறையாக என்று சொல்லி இருந்தால், இன்னும் நிரம்பப் பேருக்கு சந்தோஷமாக இருந்திருக்குமே :-)
ஐயயயோ, நான் 'கடைசியாக' என்றது எனது பேச்சுவழக்கிலே நீங்கள் சொல்லும் 'முதன்முறையாக' என்ர அர்த்தத்திலேதான்
_/\_
// -/பெயரிலி. said...
ஐயயயோ, நான் 'கடைசியாக' என்றது எனது பேச்சுவழக்கிலே நீங்கள் சொல்லும் 'முதன்முறையாக' என்ர அர்த்தத்திலேதான்//


அது எனக்கு முன்பே தெரிந்திருந்தது. " நீங்கள் சொல்வது ரொம்ப அநியாயம் என்று என்னைவிடவும் உங்களுக்கு நன்றாகத் தெரியும்" என்றும் எழுதி, கடைசி நேரத்திலே, முதல் பாதியை மட்டும் பதிந்து வைத்தேன். சரி, அத்துடன் விடாமல், ஏன் இதை மீண்டும் எழுதுகிறேன்? வேற என்ன? டைம் சரியில்லை :-)
இரா. முருகன் நடையில் யார் வருகிறார்களோ, படிக்க மிதமாகவும் இதமாகவும் இருக்கு..கையில் ஒரு ஸ்டாம்பை வச்சுட்டு ஒவ்வொருத்தர் முகத்துலேயும் குத்தித்தான் ஆகணுமா என்ன? இலக்கிய உலகத்துல இதெல்லாம் புரியலீங்க..
அதெல்லாம் இருக்கட்டும். அரசூர் வம்சத்துக்கு இன்னொரு அவார்ட் கிடைத்திருப்பதாக நேற்று இராமு அவர்கள் எஸ்.கே. அவர்களின் மகன் திருமண வரவேற்பில் கூறினார். அதற்காக அவருக்கு முதலில் வாழ்த்துக்கள் சொல்வோம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Popular posts from this blog

இந்தியாவில் வலைப்பதிவுகளுக்குத் தடை?

9 weird things about prakash

இன்குலாப் பகளாபாத், தெலுங்கு பேசினா ஹைதராபாத்