முந்தைய பதிவுகளின் (
ஒன்று,
இரண்டு &
மூன்று ) தொடர்ச்சியாக....
இது வரை நடந்த
சம்பவங்களின் தொகுப்பின் சுருக்கம் கீழே....
1. கடந்த சனிக்கிழமை அன்று, இந்தியத் தொலைத் தொடர்புத் துறையில் இருந்து, தற்போது இயங்கிவரும் நூற்று ஐம்பது இணையச் சேவை வழங்கிகளுக்கு ஒரு உத்தரவு பறந்தது. மும்பை குண்டு வெடிப்பு தொடர்பின் விளைவாக, இந்திய அரசு, 18 இணையத்தளங்களை தடை செய்யக் சொல்வதுதான் அந்த உத்தரவின் சாராம்சம். அந்த பட்டியலில், ப்லொக்ஸ்பாட்டில் இயங்கும் சில தளங்களும் இருந்தன. சில குறிப்பிட்ட வலைப்பதிவுகளை மட்டும் தடை செய்ய வழி இல்லை என்பதால் ( அல்லது அவர்களுக்குத் தெரியாது என்பதால்) ஒட்டு மொத்தமாக ப்ளாக்ஸ்பாட்டில் இயங்கும் அனைத்து வலைப்பதிவுகளையும் பார்க்க தடை விதித்து விட்டார்கள்.
2. இந்த உத்தரவைப் பிறப்பிக்கக் காரணமாக இருந்த Computer Emergency Response Team - India ( CERT-IN),இன் உயரதிகாரி, இது தொடர்பாக எந்த விளக்கமும் தர மறுத்து விட்டதோடல்லாமல், " நீ யாரு இதை எல்லாம் கேட்க? " என்கிற ரீதியில் பதிலளித்தார்கள்.
3. முதலில், சில இணையச் சேவை வழங்கிகள் மட்டும், வட இந்தியாவில் முதலில் இந்தத் தடையை அமுல் செய்ய, பிறகு, மற்றவர்களும் படிப்படியாக இந்தத் தடையை அமுல் செய்திருக்கிறார்கள். இட்லி வடை, ஏர்டெல், தடையை நீக்கி விட்டது என்று
சொல்லி இருக்கிறார். தற்போது சென்னையிலே டாடா இண்டிகாம் மட்டும் தான், இந்தத் தடையை விதிக்கவில்லை.
4. இந்திய வலைப்பதிவாளர்களின் ஒருமுனைப்பட்ட எதிர்க்குரல், நேற்றைக்குத்தான், சில வணிக ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. என்.டி.டீ.வி மற்றும், ஐபிஎன் தொலைக்காட்சிகள், இந்த விவகாரம் குறித்த செய்திக் குறிப்பினை நேற்று இரவு ஓளிபரப்பினார்கள் ( அது முழுமையானதாக இல்லை ). அதைத் தொடர்ந்து, இன்று, பல தேசிய நாளிதழ்களில், இந்த விவகாரம் பற்றி செய்தி வந்திருக்கிறது.
5. CNN, Washington Post, NewYork Times போன்ற மேற்கத்திய செய்தி ஊடகங்களும் கடுமையாக விமர்சனம் செய்திருக்கின்றன.
6. தொலைத் தொடர்புத் துறை, அமைச்சகம், போன்றவை, சரியாக விளக்கம் தராததால், Right to Information Act மூலமாக தகவல்களைப் பெறும் முயற்சியில், வலைப்பதிவாளர்கள் இறங்கி இருக்கின்றனர். ( ஒரு வலைப்பதிவாள நண்பர் உருவாக்கிய மாதிரிப் படிவம்
இங்கு கிடைக்கும். தேவைப் படுபவர்கள் இறக்கிக் கொள்ளலாம். என் பங்குக்கு நானும் ஒன்றை அனுப்பி இருக்கிறேன்.)
7. இந்தத் தடையினால் பாதிக்கப்படாமல், வழக்கம் போல இயங்குபவர்களும், இந்தத் தடையை மீறி, தமிழ்மணம், தேன்கூடு, அன்னியலோகம் அளிக்கும் சொகுசுச் சேவையைப் பயன்படுத்தி, இம்சை அரசன் புலிகேசி படத்தின் நகைச்சுவைக் கூறுகளை அலசி ஆராயும் பதிவுகளுக்குப் பின்னூட்டமிட்ட நேரம் போக, மீத முள்ள நேரத்தில், இணையத்திலே கருத்துச் சுதந்திரம் பற்றியும், இந்திய அரசாங்கத்தின் அராஜகமான போக்கு குறித்தும், ஏதேனும், நேர்மறை / எதிர்மறை கருத்து கொண்டவர்கள், தத்தமது பதிவுகளிலே, இது பற்றி எழுதி, எழுந்துள்ள எதிர்ப்புக் குரலுக்கு வலு சேர்க்குமாய் கேட்டுக் கொள்கிறேன்.
பின் குறிப்பு :
தலைப்புக்கான காரணம் : புரிந்தவர்களுக்குச் சொல்ல அவசியமில்லை. புரியாதவர்களுக்குச் சொல்லிப் பிரயோசனமில்லை.